முஸ்லிம்கள் வாக்குரிமை பறிப்பு பேச்சு- ஒக்கலிகா மடாதிபதி மீது கடும் நடவடிக்கை- சித்தராமையா உறுதி
பெங்களூர்: கர்நாடகாவில் முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என்று பேசிய ஒக்கலிகா கவுடா ஜாதி மடாதிபதி சந்திரசேகரநாத் சுவாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஒக்கலிகா கவுடா மடாதிபதி சந்திரசேகரநாத் சுவாமி தமது பேச்சுக்காக மன்னிப்பு கோரியிருந்த நிலையில் சித்தராமையா இதனைத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் வக்பு வாரிய விவகாரம் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. கர்நாடகா விவசாயிகளின் நிலம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்பதால் காலி செய்ய வேண்டும் என கர்நாடகா மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நடவடிக்கைக்கு எதிராக அண்மையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்று பேசிய ஒக்கலிகா கவுடா ஜாதி மடாதிபதி சந்திரசேகர நாத் சுவாமி, நாட்டில் விவசாயிகள் நிம்மதியாக இருக்க வேண்டும் எனில் முஸ்லிம்களின் வாக்குரிமையை பறித்துவிட வேண்டும். அப்போதுதான் அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படமாட்டார்கள் என கூறியிருந்தார்.
சந்திரசேகரநாத் சுவாமி பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதனைத் தொடர்ந்து சந்திரசேகரநாத் சுவாமி தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் முஸ்லிம்களின் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பெங்களூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சித்தராமையா கூறியதாவது: மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை நாங்கள் தொடங்கிய போது மத்திய அமைச்சர் குமாரசாமி அந்த கட்சியிலேயே இல்லை. நாங்கள் இருக்கும் வரை மதச்சார்பின்மையை அக்கட்சி கடைபிடித்தது. என்னை கட்சியில் இருந்து வெளியேற்றியதால் காங்கிரஸில் இணைந்தேன். காங்கிரஸில் சுயமரியாதை மாநாடு நடத்துவது யாருக்கும் எதிரானது அல்ல. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளோம்.
முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என பேசிய ஒக்கலிகா கவுடா ஜாதி மடாதிபதி சந்திரசேகரநாத் சுவாமி மீது தவறு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications