களைகட்டுது கச்சேரி.. பெங்களூர் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்பு!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வரும் 17,18 தேதிகளில் நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்க கூடும் என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து எதிர்கொள்வதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. பாஜகவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்துவது, பொது செயல் திட்டம் உள்ளிட்டவை தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் விவாதித்து வருகின்றன. பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் இமாச்சல பிரதேசம் சிம்லாவில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கனமழை காரணமாக இந்த கூட்டம் கர்நாடகாவில் பெங்களூர் நகரில் ஜூலை 17,18-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இம்முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக கூறிய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஒத்த கருத்துள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் பெங்களூர் கூட்டத்துக்கு அழைத்துள்ளோம். ஜூலை 17-ந் தேதி மாலை 6 மணிக்கு கூட்டம் தொடங்கும். பின்னர் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து 18-ந் தேதி முற்பகல் 11 மணிக்கு மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றார்.
இதனிடையே பெங்களுர் ஆலோசனைக் கூட்டத்துக்கு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் வருகை தரக் கூடும் என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிவகுமார் கூறுகையில், ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஜூலை 12-ல் காங்கிரஸ் கட்சி அமைதிப் போராட்டத்தை நடத்த உள்ளது. நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் ஜூலை 17,18-ல் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தியும் பங்கேற்க வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை ஏற்று, பெங்களூர் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க உள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications