இ பாஸ் ஈஸியாகிடுச்சேன்னு நினைத்து.. தமிழகத்திலிருந்து பெங்களூர் போய்விட வேண்டாம்.. இதை பாருங்க
பெங்களூர்: தமிழகத்தில் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. எனவே மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து மிக மிக அதிகரித்துள்ளது.
Recommended Video
சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்வோரும், சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்புவோரும் அதிகரித்துள்ளனர்.
விண்ணப்பிப்பவர்களுக்கு எல்லாம் இ பாஸ் கொடுக்கப்படுவதால் கணிசமானோர் விண்ணப்பிக்காமல் வாகனங்களில் சொந்த ஊர் செல்வதை பார்க்க முடிகிறது. காவல்துறையினரும் இனிமேல் கெடுபிடி செய்து என்ன ஆகப்போகிறது என்ற மன நிலைக்கு வந்துவிட்டதை தமிழகத்தின் பல பகுதிகளிலும் பார்க்க முடிகிறது.

சேவா சிந்து
இதேபோலத்தான் பெங்களூர் நகரில் பணிபுரியக்கூடிய தமிழகத்தைச் சேர்ந்த பலரும் பணி நிமித்தமாக பழையபடி பெங்களூர் திரும்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். சேவா சிந்து https://sevasindhu.karnataka.gov.in/Sevasindhu/English என்ற கர்நாடக அரசின் வெப்சைட்டில் தங்களைப் பற்றி பதிவு செய்துவிட்டு, எந்த நாளில் ஸ்லாட் ஒதுக்கப்படுகிறதோ, அன்றைய தினம் பெங்களூர் செல்வதற்கு இ பாஸ் வழங்கும் நடைமுறை அங்கு உள்ளது. பெங்களூர் மட்டுமல்ல, கர்நாடகாவின் எந்த பகுதிக்கும் பிற மாநிலங்களில் இருந்து செல்ல இதுதான் நடைமுறை.

பிற மாநிலங்களுக்கு கெடுபிடி
தமிழகத்திற்குள் இ பாஸ் நடைமுறை எளிதாக்கபட்டுள்ள போதிலும், பிற மாநிலங்களிலிருந்து வருவோருக்கு பாஸ் கொடுப்பதில் பழைய நடைமுறைதான் கடைபிடிக்கப்படுகிறது. அதே மாதிரிதான் கர்நாடகாவிலும். கர்நாடக மாநிலத்தில், மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு ஏற்கனவே இ பாஸ் நடைமுறை நீக்கப்பட்டுவிட்டது. அதேநேரம் பிற மாநிலங்களில் இருந்து வருவோர் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

செக்போஸ்ட்டில் நிறுத்தம்
குறிப்பாக, தமிழகம், மகாராஷ்டிரா போன்ற கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் இருந்து வருவோரை எல்லையில் அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்துகிறார்கள். எனவே, கிருஷ்ணகிரி, ஓசூர் மார்க்கமாக அத்திப்பள்ளி செக்போஸ்ட் வழியாக பெங்களூர் வரும் தமிழர்கள் பாஸ் இல்லாவிட்டால் அங்கேயே தடுத்து நிறுத்தி அனுப்பப்படுகின்றனர். இ பாஸ் இல்லாமல் தமிழகத்திற்குள் எளிதாக பயணிக்கக்கூடிய நமது மக்கள், பெங்களூருக்கும் அவ்வாறு சென்று விடலாம் என்று நினைத்து வந்து, சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

பாஸ் அவசியம்
அத்திப்பள்ளி செக்போஸ்ட் பகுதியில் எவ்வளவுதான் கெஞ்சினாலும், தமிழகத்திலிருந்து வருவோரை, அதிகாரிகள் விடுவதில்லை. எனவே மிகுந்த தளர்வு இருப்பதாக எண்ணிக்கொண்டு பெங்களூர் செல்வோர் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளவும். முறையாக சேவா சிந்து வெப்சைட்டில் பதிவு செய்து பாஸ் பெற்றுக் கொண்டு செல்லவும்.

சீல் அடிக்கப்படும்
இவ்வாறு பாஸ் கொண்டு வருவோருக்கு கையில் சீல் அடித்து அனுப்பப்புகிறார்கள். 14 நாட்கள் அவர்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். பணி நிமித்தமாகவோ அல்லது வேறு விஷயமாகவோ அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது என்பது நிபந்தனை. இதற்குத் தயாராக இருப்பவர்கள் மட்டும் பெங்களூர் செல்லலாம்.

குறுக்கு வழி
இதுதவிர அத்திப்பள்ளி செக்போஸ்ட் பகுதியில் சில இடைத்தரகர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இ பாஸ் இல்லாமல் வாகனங்களில் வரக்கூடியவர்களை அணுகி, தங்களுக்கு, ஆயிரம் அல்லது இரண்டாயிரம் பணம் கொடுத்தால் காவல்துறையினரின் கண்ணில் படாமல் குறுக்கு வழியாக பெங்களூருக்கு கொண்டு சென்று சேர்த்து விடுவதாக அவர்கள் கூறுகிறார்கள். விசாரித்து பார்த்தால் ஒசூரில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடை அருகேயுள்ள சாலை வழியாக கர்நாடக எல்லைக்குள் வந்து பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியை தாண்டி கொண்டு உள்ளே சென்று விட்டு விடுகிறது அந்த ஏஜென்ட் குரூப்.

பாதுகாப்பு
பெங்களூர் நகர காவல் துறையினர் இடையே சோதனை செய்வதில்லை என்பதால், எல்லையில் செக்போஸ்ட் பகுதியை இவ்வாறு குறுக்கு வழி வழியாக கடந்து வருவோருக்கு நகருக்குள் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் இது சட்டவிரோதம் என்பதோடு, ஆபத்தானது என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications