ரொம்ப வருஷம்லாம் இல்லை.. இப்போதான்.. காவிரிக்காக பெங்களூரில் 56 கேபிஎன் பஸ்களை எரித்த கொடுமை
பெங்களூர்: காவிரி பிரச்சினை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் சென்ற 56 தமிழக பேருந்துகளை எரித்த கொடுமை கண் முன் நிழலாடுகிறது.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு கர்நாடகா இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. காவிரி நீரை திறக்கும்படி கர்நாடகா அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி கர்நாடகா அரசுக்கு கடந்த 18-ஆம் தேதி உத்தரவிட்டது. இதை ஏற்க கர்நாடகா மறுத்துவிட்டது.
இந்த நிலையில் காவிரி பிரச்சினை தொடர்பாக நாளை பெங்களூரில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதை கண்டித்து கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதனால் தமிழகம்- கர்நாடகா இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் தமிழக மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதற்கு கடந்த கால வரலாறுகளே காரணம். கடந்த 2016 ஆம் ஆண்டு காவிரி நதி நீர் பிரச்சினை காரணமாக பெங்களூரில் வன்முறை வெடித்தது. இதில் தமிழர்களின் சொத்துகளுக்கு பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டது. தமிழக பதிவு எண்ணுடன் இயங்கிய வாகனங்கள் மீது கடும் தாக்குதல்கள் நடந்தன.
இதில் சேலத்தை சேர்ந்த கே.பி.என். டிராவல்ஸ் நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு தினமும் 56 வால்வோ சொகுசு பஸ்களை இயக்குகிறது. பெங்களூரில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ள துவாரகா நகர் பகுதியில் அந்த நிறுவனத்தின் டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து அங்கு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதை அறிந்த கன்னட அமைப்புகளை சேர்ந்த சுமார் 500 பேர் அந்த டெப்போவுக்கு திரண்டு போயினர். அப்போது சொகுசு பஸ் டிரைவர்களுடன் அவர்கள் மோதலில் ஈடுபட்டனர். பிறகு பேருந்துகள் மீது சரமாரியாக பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதனால் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தது. ஒரே சமயத்தில் அந்த பேருந்துகள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பின்னர் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர்.
இந்த பேருந்து எரிப்பால் 56 பேருந்துகளும் எரிந்து சுமார் ரூ 50 கோடி இழப்பு ஏற்பட்டிருந்தது. காவிரி விவகாரத்தில் நாளை பந்த் நடைபெறுவதால் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களை இயக்குவதில் சிக்கல்கள் உள்ளன. இந்த முறையும் காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்புகள் கொடூர நிகழ்வுகளை ஏற்படுத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications