நம்புங்க.. இது 21ம் நூற்றாண்டு! மைசூரில் தண்ணீர் குடித்த தலித்.. கோமியத்தால் கழுவப்பட்ட தொட்டி
பெங்களூரு: மைசூரில் தலித் பெண் சிறிய தொட்டி ஒன்றில் தண்ணீர் குடித்ததால் அதை கோமியத்தை கொண்டு சாதிவெறியர்கள் தூய்மைப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த 21 ஆம் நூற்றாண்டில் உலகம் கணக்கிட முடியாத அளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருக்கிறது. கிராமங்கள், வீடுகளுக்குள் அடைந்து கிடந்தவர்கள் உலகம் முழுவதும் தொடர்புகொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்து உள்ளனர்.
இந்தியாவிலும் தொழில்நுட்பம், போக்குவரத்து, மருத்துவம் என அனைத்தும் பெரும் மாற்றமும் முன்னேற்றமும் அடைந்து இருக்கிறது. ஆனால், சாதி, மதம் என்ற பெயரில் அரங்கேறும் கொடுமைகள் மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
உன்ன நம்புனேன் பாரு.. கூகுள்மேப்பால் குரூப் 1 தேர்வு எழுதாத கோவை பெண்..காலதாமதத்தால் அனுமதி மறுப்பு
தலித் பெண்
தினசரி சாதி, மதவெறி மோதல்கள், கொடுமைகள், அடக்குமுறைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கர்நாடக மாநிலம் மைசூரில் தலித் பெண் சாதி ரீதியாக அவமதிக்கப்பட்டு உள்ளது தற்போது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சாம்ராஜ்நகர் அருகே உள்ளது ஹெக்கோடரா கிராமம்.
தண்ணீர் குடித்த தலித்
கடந்த வெள்ளிக்கிழமை எச்டி கோடே அருகே உள்ள சர்கூர் கிராமத்தை சேர்ந்த மணப்பெணின் உறவினர்கள் ஹெக்கோடரா கிராமத்துக்கு வருகை தந்து உள்ளனர். அங்கு நடைபெற்ற விருந்தில் உணவருந்திய தலித் பெண் ஒருவர், அருகே உள்ள பேருந்து நிலையத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் குடித்து இருக்கிறார்.
அவமதித்த உயர்சாதியினர்
இதனை கண்ட சாதிவெறியர் ஒருவர் தொட்டியில் தண்ணீர் அருந்தியதற்காக தலித் பெண்ணை கடுமையாக திட்டி இருக்கிறார். மேலும் அங்கிருந்தவர்களை அழைத்தும் அந்த பெண்ணை கண்டிக்க சொல்லி இருக்கிறார். இதனால் அந்த பெண் அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றார்.
கோமியத்தில் கழுவப்பட்ட தொட்டி
அவர் அங்கிருந்து சென்றதுதான் தாமதம்... உடனே உயர்சாதியினர் அந்த பெண் பயன்படுத்திய தொட்டியில் இருந்த தண்ணீர் அனைத்தையும் வெளியேற்றினர். அதனை தொடர்ந்து மாட்டு கோமியத்தை எடுத்து வந்து அந்த தொட்டியை கழுவி இருக்கிறார்கள். இதுகுறித்து பாதிக்கப்பட்ட தலித் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
நடவடிக்கைக்கு உத்தரவு
இதனை வீடியோவாக பதிவு செய்த யாரோ ஒருவர் சமூக வலைதளத்தில் அதனை வெளியிட பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலித் பெண்ணை அவமதித்த உயர்சாதியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனை தொடர்ந்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு சாம்ராஜ்நகர் தாசில்தார் பசவராஜ் உத்தரவிட்டார்.
விசாரணை அறிக்கை
அதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விபரங்களை சேமித்து அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறார்கள். மேலும் சமூக நலத்துறை அமைச்சக உதவி இயக்குநர் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் தெரிவித்து உள்ளார்.