"டாக்சிக்" ஆபீஸ்.. மேனேஜர் செய்த மோசமான காரியம்.. பெங்களூர் AI நிறுவன ஊழியர் மரணத்தில் திருப்பம்!
பெங்களூர்: கர்நாடகாவில் பிரபல ஏஐ நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு இளைஞர் இரு வாரங்களுக்கு முன்பு ஏரியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதற்கிடையே வேலை அழுத்தம் காரணமாகவும் மேனேஜரின் அத்துமீறும் நடவடிக்கை காரணமாகவும் அந்த நபர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இப்போது ஐடி நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு அழுத்தம் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக ஸ்டார்ட் அப் ஐடி அல்லது டெக் நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு அதீத அழுத்தம் இருக்கும். அந்த நேரத்தில் மேனேஜர்கள் அரவணைத்துச் செல்லவில்லை என்றால் ஊழியர்களுக்கு இது பெரிய சிக்கலையே தரும்.

சடலம் மீட்பு
பெங்களூரின் அகாரா ஏரியில் 25 வயது இன்ஜினியர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் பெங்களூரில் உள்ள பிரபல ஏஐ நிறுவனத்தில் மெஷின் லேர்னிங் பிரிவில் வேலை செய்து வந்தார். இதற்கிடையே அவர் டாக்சிக் ஒர்க் கல்ச்சர் மற்றும் கம்பெனியின் சுரண்டல் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக ரெட்டிட் தளத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கடந்த மே 8ஆம் தேதி பெங்களூர் ஏரியில் நிகில் சோம்வன்ஷியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
நிகில்
பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற நிகில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெங்களூரில் உள்ள பிரபல ரைடு-ஹெய்லிங் செயலியின் ஏஐ பிரிவில் மெஷின் லெர்னிங் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார். கல்லூரியில் மிகச் சிறந்த மாணவராக இருந்த நிகில் 9.3 ஜிபிஏ மதிப்பெண் பெற்றவர் ஆவார். இருப்பினும், அவர் வேலை செய்த இடத்தில் அவருக்கு கடும் அழுத்தம் தரப்பட்டது.
மேனேஜர் செய்த காரியம்
அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மேனேஜர் ஒருவர் மிக மோசமாக நடத்தியதால் அவரது டீமில் பலர் வேலையை ராஜினாமா செய்துவிட்டனர். இதனால் நிகிலுக்கு மேலும் மேலும் பல கூடுதல் வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. கிர்கவாகுட்ஸோ என்ற ரெட்டிட் யூசர் அந்த அமெரிக்க மேனேஜர் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அவர் மிக மோசமாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் குறிப்பாகப் புதிதாக பணியில் சேர்வோருக்கு கடும் அழுத்தம் கொடுப்பார் என்றும் கிர்கவாகுட்ஸோ தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே பலரும் அவரது டீமில் இருந்து ராஜினாமா செய்ததாகவும் தெரிவித்துள்ளார். நிகில் மரணமடைந்தது தெரிந்தும் கூட அந்த அமெரிக்க மேனேஜர் தொடர்ந்து மற்ற ஊழியர்கள் மிக மோசமாகவே நடத்தி வருவதாக அந்த 'கிர்கவாகுட்ஸோ' ரெடிட் பயனர் குற்றம் சாட்டினார்.
டாக்சிக் கல்ச்சர்
அந்த மேனேஜர் எப்போதும் இதுபோல ஆக்ரோஷமாகவே நடந்து கொள்வார் என்றும் பெரும்பாலான ஜூனியர் ஊழியர்களை இழிவுபடுத்தி அவர்களைத் திறமையற்றவர் என்று முத்திரை குத்துவதையே வழக்கமாக வைத்திருப்பதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத ஊழியர்கள் கூறுகிறார்கள். பலரும் அந்த ஒரு நபர் கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே வேறு வேலை இல்லை என்றாலும் ராஜினாமா செய்ததாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் நிறுவனத்திடம் முன்னாள் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
முன்னாள் ஊழியர்கள் மேலும் கூறுகையில், "அந்த நபருக்கு ஊழியர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதே தெரியாது.. சும்மா வந்து கத்திவிட்டுப் போய் விடுகிறார். மீட்டிங்கின் போது அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும். அதிலிருந்து மீள்வதே மிகக் கடுமையாக இருக்கும்" என்றார்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications