பெங்களூர் ஏர்போர்ட்டில் விமானம் மீது மோதிய டெம்போ வேன்.. பதறிய பயணிகள்.. என்ன நடந்தது?
பெங்களூர்: பெங்களூர் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இண்டிகோ விமானம் மீது டெம்போ டிராவலர் வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை என்றாலும் பரபரப்பான விமான நிலையத்தில் நடைபெற்று இருக்க கூடிய இந்த விபத்தானது பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இண்டிகோ விமானம் மீது டெம்போ வேன் ஒன்று மோதியது. விமானம் மீது மோதியதில் வேனின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நண்பகல் 12.15 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தின் பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இண்டிகோ விமானம் மீது எதிர்பாராத விதமாக டெம்போ வேன் மோதியுள்ளது. இந்த விபத்து நேரிட்ட போது விமானம் சேவையில் இல்லை எனவும் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது எனவும் இண்டிகோ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
டெம்போ வேன் டிரைவரின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் எனவும் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாக இருக்க கூடிய பெங்களூர் விமான நிலையத்தில் விமானம் மீது டெம்போ வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தின் மீது டெம்போ வேன் மோதியதையடுத்து, உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்று விட்டு இருப்பதாகவும், பயணிகள் பாதுகாப்பு மற்றும் விமான நிலைய பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடைமுறைகள் பின்பற்றப்படும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இண்டிகோ விமான நிறுவனம் இச்சம்பவம் குறித்து கூறுகையில், "பெங்களூர் விமான நிலையத்தில் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போது ஏற்பட்ட விபத்து குறித்து நாங்கள் அறிந்துள்ளோம். விபத்தை ஏற்படுத்திய வாகனம் மூன்றாம் தரப்பு ஏஜென்சியால் இயக்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து உள்விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications