எம்எல்ஏக்கள் போர்க்கொடி.. வாரிசுகளுக்கு சீட் கேட்கும் நிர்வாகிகள்..கர்நாடகா தேர்தலில் பாஜக திணறல்!
பெங்களூரு: கர்நாடகாவில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் தொடங்க உள்ள நிலையில், பாஜக அடுத்த இரண்டு நாட்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறது. ஆனால் வேட்பாளர்களை இறுதி செய்வதில் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக பாஜக மத்திய தேர்தல் குழு உறுப்பினர் பிஎஸ் எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக காங்கிரஸ் ஏற்கனவே வேட்பாளர் பட்டியலை அறிவித்த நிலையில், பாஜக வரும் 10ம் தேதி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறது. ஆனால் இதில் ஏகப்பட்ட நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் மாநில தலைமை கூறியுள்ளது. அதாவது குறிப்பிட்ட 40 தொகுதிகளில் வேட்பாளர் போட்டி பட்டியலில் 4-5 பேரின் பெயர் இருப்பதால் யாரை இறுதி செய்வது என்கிற கேள்வி எழுந்துள்ளதாக கட்சி தலைமை கூறியுள்ளது.

இதில் தேர்வு செய்யப்படாத பிரமுகர்கள் அதிருபத்தியடைந்து காங்கிரஸ் பக்கம் போவதற்கும் வாய்ப்பிருப்பதால் இந்த விஷயத்தை கட்சி கவனமாக கையாண்டு வருகிறது. அதேபோல கோகாக் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ரமேஷ் ஜார்கிஹோலி தனது ஆதரவாளர்களுக்காக காக்வாட், அதானி மற்றும் பெல்காம் புறநகர் என மூன்று தொகுதிகளை கேட்டிருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ப்பு எற்பட்டு பாஜக ஆட்சியை கைப்பற்றியதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்தான் இந்த ரமேஷ் ஜார்கிஹோலி. தற்போது அவர் கேட்டும் சீட்களை கொடுக்கவில்லையெனில் கிளர்ச்சியில் ஈடுபட போவதாக வெளிப்படையாகவே அவர் மிரட்டல் விடுத்திருக்கிறார்.
அதேபோல ரானேபன்னூர் தொகுதியின் கரண்ட் எம்எல்சி ஆர்.சங்கர் தனக்கு இந்த முறை சீட் ஒதுக்கவில்லையெனில் சுயேட்சையாக போட்டியிடுவதாக கூறியுள்ளார். இப்படியாக பல சிட்டிங் எம்எல்ஏக்கள் தங்களுக்கும், தங்கள் உடன் பிறப்புகளுக்கும் சீட் கேட்டு நச்சரித்து வருகின்றனர். எனவே வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதாக கட்சி தலைமை புலம்ப தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications