என்னங்க ரயிலே வெயிட் பண்ணுது.. ‛ட்ரெயினையே’ முடக்கிய பெங்களூர் ‛டிராபிக்’.. விளாசும் நெட்டிசன்கள்
பெங்களூர்: பெங்களூரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் பெங்களூரில் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் ரயில் சிக்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்ட வீடியோ வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது.
பெங்களூர் நகரின் மக்கள்தொகை என்பது ஒரு கோடியை தாண்டி விட்டது. இதனால் நாளுக்கு நாள் மக்கள் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் எந்த சாலையில் பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் தான் காணப்படுகிறது.

குறிப்பாக காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் ஏறக்குறைய அனைத்து சாலைகளும் வாகனங்களால் முடங்கிவிடும். இந்த நேரத்தில் தான் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்களும், அலுவலகங்களுக்கு பொதுமக்களும் சென்று வருவார்கள் என்பதால் அந்த நேரத்தில் முக்கிய சாலைகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து தான் செல்லும்.
இத்தகைய நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதாவது பெங்களூர் ரோட்டில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் ரயில் பயணம் தடைப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் சுதீர் சக்கரவர்த்தி என்பவர் பதிவிட்டுள்ளார். அதில், ‛‛நான் அல்லது நீங்கள் மட்டுமில்லை.. ரயில் கூட பெங்களூர் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க முடியாது'' என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த வீடியோ என்பது பெங்களூர் அவுட்டர் ரிங்க் ரோடு அருகே உள்ள முன்னிகொலல்லா ரயில்வே கேட் பகுதியில் நடந்துள்ளது. அதாவது சாலையின் குறுக்காக தண்டவாளம் செல்கிறது. இந்த தண்டவாளத்தில் ரயில் வரும்போது ரயில்வே கேட் என்பது அடைக்கப்படும். ஆனால் நேற்றைய தினம் அந்த பகுதியில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் ரயில்வே கேட் அடைக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக சாலையை கடந்து செல்ல வந்த ரயில் சிறிது நேரம் தண்டவாளத்தில் நின்றது. சாலையில் வாகனங்கள் சென்று போக்குவரத்து நெரிசல் சரியான பிறகு அங்கிருந்து ரயில் புறப்பட்டு சென்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பெங்களூர் போக்குவரத்து நெரிசல் பற்றி கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் சிலிக்கான் வேலியாக பெங்களூர் உள்ளது. ஆனால் பெங்களூரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் வகையில் உள்கட்டமைப்புகள் என்பது இல்லை. இது மிகவும் கவலையளிக்கிறது. வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதால் பெங்களூர் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications