மரத்தில் கட்டி வைத்து..உள்ளாடைக்குள் எறும்பை கொட்டி.. ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரம்! கர்நாடகா ஷாக்!
பெங்களூர்: கர்நாடகாவில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுவனை மரத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்தி இருக்கின்றனர் ஒரு கும்பல். சிறுவனை கொடூரமாக தாக்கியும் சிகப்பு எறும்புகளை அவனது பிறப்புறுப்பில் கடிக்க வைக்கும் கொடுமைப்படுத்திய வீடியோ வெளியாகி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் சங்ககிரி பகுதி அருகே அஸ்தபனஹல்லி கிராமத்தை சேர்ந்த ஒரு பழங்குடியின சிறுவன் தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். கிராமத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் கிடைக்கும் மூலிகைகளை சேகரித்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி அந்த சிறுவனை ஒரு கும்பல் கடுமையாக தாக்கி இழுத்து சென்றிருக்கிறது. சாதி வெறி ஊறிப் போன அந்த கும்பல் சிறுவன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி அவரை அரை நிர்வாணமாக்கி அங்குள்ள பாக்கு மரத்தில் கட்டி வைத்திருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் அந்த சிறுவனை மிகக் கொடூரமான முறையில் தாக்கியதோடு, அவனது உள்ளாடைக்குள் சிகப்பு எறும்புகளை விட்டு கடிக்க வைத்திருக்கிறார்கள்.
வலி தாங்க முடியாமல் அந்த சிறுவன் கதறி துடிக்க அவனைப் போலவே அவர்களும் கதறி சிரித்து ரசித்து இருக்கின்றனர். மேலும் திருட்டு சம்பவத்தில் சிறுவனுக்கு உதவியதாக மற்றொரு சிறுவனையும் இதே போல தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 9 பேர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் கடந்த மூன்றாம் தேதியே நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் வீடியோ வெளியானதற்கு பிறகு தான் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பொது உலகுக்கு தெரிய வந்திருக்கிறது. கர்நாடகா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என தாவாங்கிரி எஸ் பி உமா பிரசாத் கூறியிருக்கிறார்.
சிறுவனை கொடூரமாக அந்த கும்பல் தாக்கி இருக்கும் நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே சிறுவனுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. மேலும் சிறுவனுக்கு நீதி வழங்க கோரி பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications