இனி கிட்னியை விற்றாலும் பத்தாது போல.. ஐபோன் விலையை அதிரடியாக உயர்த்தும் ஆப்பிள்.. என்ன காரணம்?
சியாட்டில்: ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் பொதுவாகவே காஸ்ட்லியாகவே இருக்கும். அவற்றை வாங்க வேண்டும் என்றால் கிட்னியை கூட விற்க வேண்டும் என்ற ஜோக்கை நாம் பார்த்திருப்போம். ஆனால், இனி கிட்னியை மட்டும் விற்றால் போதாது போல.. ஆமாம், தனது பொருட்களின் விலையை உயர்த்த போவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
சும்மாவே ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், லேப்டாப் போன்றவற்றின் விலை அதிகமாகவே இருக்கும். சாமானிய மக்களால் அவ்வளவு சீக்கிரம் ஆப்பிள் போன் வாங்குவதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால், ஆப்பிள் பொருட்களின் விலை மேலும் உயரப் போகிறதாம். ஐபோன், மேக்புக் மற்றும் ஐபேட் போன்றவற்றின் விலையை உயர்த்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

விலையேற்றம்
இது குறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழுக்கு அளித்த பேட்டியில் ஆப்பிள் சிஇஓ டிம் குக் இது தொடர்பாக விரிவாகப் பேசியுள்ளார். மெமரி மற்றும் ஸ்டோரேஜ் சிப்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதற்காகப் பெரிய அளவிலான டேட்டா சென்டர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த டேட்டா சென்டர்களுக்கு தேவையான சிப்களை வாங்குவதில் பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் சந்தையில் சிப்களின் இருப்பு குறைந்து, அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுவே ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
எச்சரிக்கை
சிப் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்து வாகன நிறுவனங்கள் தொடங்கி பல்வேறு நிறுவனங்களின் கூட்டமைப்புகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தன. மெமரி சிப்களுக்கான தேவை அதிகரிப்பது நுகர்வோர் பொருட்களின் விலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் இது விநியோகச் சங்கிலியைப் பாதிக்கும் என்றும் அவர்கள் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தனர். தற்போது அந்த எச்சரிக்கை உண்மையாகி வருவதை டிம் குக் பேட்டி உறுதி செய்கிறது.
விலையேற்றம் உறுதி
இது தொடர்பாக டிம் குக் பேசுகையில், "துரதிர்ஷ்டவசமாக விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. எங்கள் மீது சுமத்தப்படும் இந்த கூடுதல் செலவுகளைக் குறைக்கவும், வாடிக்கையாளர்களைப் பாதிக்காமல் இருக்கவும் நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தோம். ஆனால் தற்போது நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றுவிட்டது" என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், எந்தெந்த பொருட்களின் விலை எவ்வளவு உயரும் அல்லது எப்போது இந்த உயர்வு அமலுக்கு வரும் என்பது குறித்த தெளிவான தகவல்களை அவர் இன்னும் வெளியிடவில்லை.
ஆப்பிள் நிறுவனத்தில் ஒரு முக்கிய மாற்றமாக, வரும் செப்டம்பர் மாதம் டிம் குக் தனது பதவியிலிருந்து விலகி, ஜான் டெர்னஸிடம் பொறுப்புகளை ஒப்படைக்க உள்ளார். அதே செப்டம்பர் மாதத்தில் ஆப்பிள் தனது முதல் மடிக்கக்கூடிய (Foldable) ஐபோனை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதனுடன் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களும் வெளியாக உள்ளன. புதிய கருவிகள் அறிமுகமாகும் அதே வேளையில் இந்த விலை உயர்வு அறிவிப்பும் வெளியாகியுள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் என்ன
டி-ரேம் சந்தையில் நிலவும் சூழல் ஆப்பிள் நிறுவனத்திற்குப் பெரும் கவலையை அளித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் அதிகப் பணம் கொடுப்பதால் ஏஐ சர்வர்களில் பயன்படுத்தப்படும் அதிவேக மெமரி தயாரிப்பிற்கே தற்போது சிப் உற்பத்தி நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. இதனால் சாதாரண நுகர்வோர் சாதனங்களுக்குத் தேவையான மெமரி சிப்களின் வரத்து குறைந்துவிட்டது. மெமரி சிப்களின் விலை மற்றும் விநியோகம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பினால் மட்டுமே நுகர்வோர் பொருட்களின் விலையைச் சீராக வைத்திருக்க முடியும் என்று குக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிக்கலைச் சமாளிக்க ஆப்பிள் நிறுவனம் தனது கையிருப்பில் உள்ள பணத்தை பயன்படுத்தத் தயாராக உள்ளது. சிப் உற்பத்தியை அதிகரிக்கவும், விநியோகத்தை சீர்செய்யவும் உதவத் தயார் என்று டிம் குக் கூறியுள்ளார். ஆனால், ஆப்பிள் நிறுவனம் தனது சொந்த சிலிக்கான் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி, சொந்தமாக மெமரி அல்லது ஸ்டோரேஜ் சிப் தொழிற்சாலைகளைத் தொடங்கும் எண்ணம் ஏதும் இல்லை என்பதையும் அவர் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications