அலறவிடும் குரங்கு காய்ச்சல்.. ஏற்கனவே இருவர் பலி! ஹை-அலர்ட் மோடில் கர்நாடகா.. தடுக்க என்ன செய்யணும்
பெங்களூர்: ஒட்டுமொத்த கர்நாடகாவையும் அலறவிடும் வகையில் குரங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், அங்கே இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பரவி வருகிறது. ஏற்கனவே இதனால் இரண்டு பேர் உயிரிழந்துள்ள சூழலில், நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக அண்டை மாநிலங்களான கேரளாவிலும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குரங்கு காய்ச்சல் என்றால் என்ன.. இதன் பாதிப்புகள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
குரங்கு காய்ச்சல்: கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் என்று அழைக்கப்படும் கியாசனூர் பாரஸ்ட் நோய் (Kyasanur Forest Disease) ஏற்பட்டுள்ளது. டிக் என்ற ஒரு வகை பூச்சியால் இந்த குரங்கு காய்ச்சல் பரவுகிறது. ரத்தக்கசிவு கூட ஏற்படுத்தும் இந்த குரங்கு காய்ச்சல் கர்நாடகாவில் இரண்டு பேரின் உயிரையும் பறித்துள்ளது. மேலும் இதுவரை சுமார் 50 பேருக்கு அங்கே குரங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அங்குள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில் தான் அதிகப்படியான கேஸ்கள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து சிவமொக்கா மற்றும் சிக்கமகளூரு மாவட்டங்களிலும் அதிக கேஸ்கள் பதிவாகியுள்ளன. இந்த குரங்கு காய்ச்சல் பாதிப்பைச் சமாளிக்க அம்மாநில சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக உயிரிழப்புகளைத் தடுப்பதில் சுகாதாரத் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
முதலில் எங்கே: ஃபிளவிவிரிடே வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கியாசனூர் பாரஸ்ட் டீசீஸ் வைரஸால் இந்த குரங்குக் காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வைரஸ் முதன்முதலில் 1957ஆம் ஆண்டில் கர்நாடகாவின் கியாசனூர் வனப்பகுதியில் உள்ள குரங்கிடம் கண்டறியப்பட்டது. இதன் காரணமாகவே இதைக் குரங்கு காய்ச்சல் என்றும் மக்கள் அழைக்கிறார்கள்.
பொதுவாக இந்த வகை பாதிப்பு உள்ள குரங்குகளைக் கடிக்கும் உண்ணிகள், மனிதனைக் கடிக்கும் போது இந்த வகை பாதிப்பு மனிதர்களுக்கும் பரவுகிறது. நோய்வாய்ப்பட்ட அல்லது இதனால் உயிரிழந்த குரங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த குரங்கு காய்ச்சல் பரவுகிறது. அதேநேரம் இது மனிதர்களுக்கு இடையே பரவுகிறது எனச் சொல்ல எந்த ஆதாரமும் இல்லை.
அறிகுறிகள்: இந்த வகை காய்ச்சல் 3 முதல் 8 நாட்கள் வரை உடலில் இருக்கும். குளிர், காய்ச்சல், தலைவலி, கடுமையான தசை வலி, வாந்தி, இரைப்பை குடல் பிரச்சினைகள், ரத்தப்போக்கு ஆகியவை 4 நாட்களுக்குப் பிறகு ஏற்படலாம். சிலருக்குக் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையைக் குறைவது ஆகியவையும் கூட ஏற்படும் ஆபத்து இருக்கிறது.
இருப்பினும், சில நோயாளிகளுக்கு 2 வாரங்களுக்குப் பிறகு அடுத்தகட்ட பாதிப்பு ஏற்படும். அவர்களுக்குக் காய்ச்சல் மற்றும் கடுமையான தலைவலி, மன ரீதியான பாதிப்புகள், நடுக்கம் மற்றும் பார்வைக் குறைபாடுகள் போன்ற நரம்பியல் பிரச்சினைகளும் கூட ஏற்படும்.
தடுக்கும் வழிகள்: குரங்கு காய்ச்சலைத் தடுக்க பல வழிகள் உள்ளன. இதற்கான தடுப்பூசி ஏற்கனவே நாடு முழுக்க கிடைக்கிறது. இது தவிர உண்ணி கடியில் இருந்து தப்பிக்க பேஸ்ட்களை பயன்படுத்தலாம். மேலும், பாதுகாப்பான ஆடைகளை அணிவது, இந்த பாதிப்பு ஏற்பட்ட விலங்குகள் உடனான தொடர்பைத் தவிர்ப்பது ஆகியவை முக்கியமானதாகும். மேலும், உண்ணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த குரங்கு காய்ச்சலுக்குக் குறிப்பிட்ட சிகிச்சை முறை என்று எதுவும் இல்லை. இதன் பாதிப்பைக் கண்டறிந்த உடன் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு சப்போர்ட்டிவ் சிகிச்சையைத் தொடங்குவது தீவிர தன்மையைக் குறைக்கும். மேலும், உடலில் நீர்ச்சத்தை அதிகமாக வைத்திருக்க வேண்டும்.. ரத்தப்போக்கு ஏற்பட்டால் அதைத் தடுக்க முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications