பெங்களூரில் அதிர்ச்சி: பைக் மீது கார் மோதி, 30 அடி தூக்கி வீசப்பட்டு பலியான தமிழகத்தை சேர்ந்த இருவர்
பெங்களூர்: பெங்களூர் நகரில் உள்ள, பிரசித்தி பெற்ற ஓசூர் சாலை மேம்பாலத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவர் வேகமாக வந்த கார் ஒன்று மோதி 30 அடிக்கு கீழே தூக்கி வீசப்பட்ட பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு பெங்களூரு நகரத்தில் பொம்மனஹள்ளி பகுதியில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரையில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு உயரடுக்கு எக்ஸ்பிரஸ்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
2010ம் ஆண்டு முதல் இந்த மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

ஐடி ஊழியர்கள்
எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெருவாரியான முன்னணி ஐடி நிறுவனங்கள் குவிந்திருப்பதால் நகரத்தினுள் உள்ள பகுதியிலிருந்து அங்கே செல்லக்கூடிய பணியாளர்கள் டிராபிக் நெரிசலில் சிக்கி தவிப்பதை தடுப்பதற்காக இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டது. இருப்பினும் இதற்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பற்ற பாலம்
சுங்க கட்டணம் செலுத்த விருப்பமில்லாத வாகன ஓட்டிகள் , பாலத்துக்கு அடியில் உள்ள நெடுஞ்சாலை வழியாக எலக்ட்ரானிக் சிட்டி பகுதியை அடைய முடியும். சுங்க கட்டணம் செலுத்தினால் சிக்னல்கள் ஏதுமில்லாமல் 10 கிலோ மீட்டர் தூரத்தை அதிகபட்சம் 15 நிமிடங்களுக்குள் கடந்துவிடலாம். அதே நேரம் இந்த மேம்பாலம் பாதுகாப்பானதாக இல்லை என்பது உண்மை. அதற்கு ஒரு முக்கியமான காரணம் பாலத்தின் அகலம் மிகவும் குறுகியதாக இருக்கிறது என்பதும், அங்கே பயணிக்கும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன என்பதும் தான்.

விபத்துகள்
இந்த ஆண்டு இதுவரை சுமார் 45 விபத்துக்கள் அந்த பாலத்தில் நடைபெற்றுள்ளன. இதில் 60 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்பட்டது இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தான். அதிவேகமாக இந்த சாலையில் கார்கள் பயணிப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் விழிப்புடன் வாகனத்தை இயக்க வேண்டி உள்ளது. தாங்கள் செல்லும் பாதையிலிருந்து சற்று வலது பக்கமாக வாகனம் வந்தாலும் பின்னாலிருந்து அதிவேகமாக வரும் கார்களில் சிக்கிக் கொண்டு அவர்கள் பலியாகும் சூழ்நிலைகள் ஏற்படுகிறது.

பைக் மீது மோதிய கார்
இந்த மேம்பாலத்தில் நேற்று இரவு ஒரு கொடூர விபத்து நடந்துள்ளது. ராயல் என்பீல்ட் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் வேகமாக வந்த கார் மோதியதில் பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டனர். 30 அடிக்கு கீழே மெயின் ரோட்டில் அவர்கள் இருவரும் விழுந்தனர். இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே அந்த இருவரும் பலியாகினர்.

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்
இருசக்கர வாகனத்தில் தமிழ்நாடு பதிவு எண் பொருத்தப்பட்டிருந்தது. எனவே அவர்கள் ஓசூர் நகர சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்பட்டது. மேற்கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்திய போது உயிரிழந்த ஆண் பெயர் பிரீதம்குமார் என்பதும் அவருக்கு வயது 30 என்பதும் தெரியவந்தது. உயிரிழந்த பெண் பெயர் கிருத்திகா ராம். வயது 28. இதில் ப்ரீதம், பெங்களூரு நகரின் ஜேபி நகர் பகுதியில் வசித்து வந்தார். கிருத்திகா மகாதேவபுராவிலுள்ள ஒரு கம்பெனியில் டீம் லீட் பணியில் இருந்தார் என்பது தெரியவந்துள்ளது. இருவருமே பூர்விகமாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. காரை ஓட்டிச் சென்ற நிதேஷ் என்ற 23 வயது இளைஞரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். பெங்களூரில் சமீபத்தில் ஆடி கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒசூர் எம்எல்ஏ பிரகாஷின் மகன் கருணாசாகர் உட்பட 7 பேர் பலியான சோகம் மறப்பதற்குள், மற்றொரு மோசமான விபத்து அங்கே அரங்கேறியுள்ளது.












Click it and Unblock the Notifications