அடையாளம் காணப்பட்டது மாணவர் நவீன் உடல்.. கர்நாடக முதல்வர் தகவல்.. இந்தியா கொண்டுவர ஏற்பாடு
பெங்களூர்: உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மாணவர் நவீனின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், இந்திய மாணவர் நவீன் சுட்டுக் கொல்லப்பட்டார். மளிகை பொருள்களை வாங்குவதற்காக ஒரு கடை வாசலில் நின்றிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூட்டை ரஷ்ய ராணுவம் நடத்தியதாக இந்திய மாணவருடைய நண்பர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இருந்து பல இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு வந்து, அங்கிருந்து இந்தியாவுக்கு மீட்கப்பட்டு வருகின்றனர். ஆனால் சில இந்திய மாணவர்கள் உக்ரைனைவிட்டு வெளியே வரமுடியாமல் அங்கேயே இருக்கிறார்கள்.

நவீன்
உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் மருத்துவம் படிக்கும் மாணவர் நவீன் சேகரப்பா. இவர் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா சாலக்கேரி கிராமத்தை சேர்ந்தவர். 20 வயதான நவீன் உக்ரைனில் உள்ள பல்கலைக்கழகத்தில் 4 ஆவது ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். உக்ரைனில் போர் நடந்து வருவதால், அங்கிருக்கும் பதுங்கு குழியில் தங்கி வந்தார் நவீன். இந்நிலையில் நேற்று ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்திய போது இந்திய மாணவர் நவீன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுட்டுக்கொலை
இதுகுறித்து நவீனுடன் ஹாஸ்டலில் தங்கியிருந்த ஸ்ரீதரன் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், நவீன் நேற்று காலை உக்ரைன் நேரப்படி 10.30 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டார். மளிகைக் கடை முன்பு வரிசையில் காத்திருந்த போது அங்கிருந்த மக்கள் மீது ரஷ்யா ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அப்போது நவீன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் எங்கிருக்கிறது என தெரியவில்லை. எங்களால் மருத்துவமனைக்கும் சென்று பார்க்க முடியவில்லை என்றார்.

மோடி
இந்திய மாணவர் உக்ரைனில் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, இந்தியா முழுவதும் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் உயிரிழந்த மாணவர் நவீனின் தந்தை சேகரப்பா ஞானகவுடாவை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார் பிரதமர் நரேந்திர மோடி. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நவீனின் தந்தையை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ''இது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. நவீனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். நவீனின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன். தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளேன்'' எனக்கூறினார்.
Recommended Video

நவீனின் உடல்
இந்நிலையில் நவீன் உடல் குறித்து தகவலை தெரிவித்துள்ளார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை. அவர் கூறுகையில், ''நவீனின் நண்பர் எங்களுக்கு நவீன் உடல் என சில புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அதை நாங்கள் வெளியுறவுத் துறைக்கு அனுப்பி, இதை உறுதி செய்ய சொல்லி இருக்கிறோம். அதேபோல் இந்திய தூதரகத்திடமும், நவீன் உடலை பாதுகாப்பது குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம்.
எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்து, மாணவரின் உடலை எடுத்து கொண்டு வருவோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications