நாடு முழுக்க பொருளாதார மந்தம்.. கூலாக வேலைவாய்ப்பை அள்ளி வழங்கும் கர்நாடகா.. கலக்கும் ஐடி
பெங்களூர்: இந்தியா முழுக்க வேலையில்லாத் திண்டாட்டமும், பொருளாதார மந்தமும் நிலவி வரும் நிலையில், தகவல் தொழில்நுட்பத் தலைநகர் என்று அழைக்கப்படும் பெங்களூரின் பலனால், கர்நாடகா தலைநிமிர்ந்து நிற்கிறது.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கான வேலையின்மை தொடர்பான ஒரு புள்ளி விவரத்தை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவில் வேலையில்லா திண்டாட்டம் 0.7 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. நாட்டிலேயே இதுதான் குறைவான அளவு.

மளமள குறைப்பு
கடந்த சில மாதங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்து இருக்கக்கூடிய நாட்டின் பெரிய ஒரே மாநிலம் என்ற பெருமை கர்நாடகாவிற்கு கிடைத்துள்ளது.
2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கர்நாடகாவில் வேலையில்லாத் திண்டாட்டம் என்பது 6.7 சதவீதமாக இருந்தது. இப்போது இந்த அளவு குறைவதற்கு முக்கியமான ஒரு காரணம் இங்குள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அதிக அளவில் பணியாளர் சேர்க்கையில் ஈடுபடுவது தான் என்று கூறப்படுகிறது.

ஐடி துறை
கர்நாடக மாநிலத்தில் பெருமளவுக்கு வேலை வாய்ப்பு தருவது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தான். எனவே அவற்றில் நிலவும் சிறு மாற்றங்களும் மொத்த புள்ளிவிவரத்தில் எதிரொலிக்கும். தலைநகர் பெங்களூரில்தான் அதிகப்படியான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. கடந்த நிதியாண்டு முதல் இந்த நிறுவனங்கள் அதிக அளவுக்கு பணியாளர்களை பணிக்கு தேர்வு செய்து கொண்டு வருகின்றனர்.

மெட்ரோ கலாச்சாரம்
பெங்களூரில் மட்டும் தகவல் தொழில்நுட்பத் துறையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் உள்ளனர். வொர்க்ஃபோர்ஸ் மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் ரோஹித் பாத்தியா, இதுபற்றி கூறுகையில், ஸ்டார்ட்அப்எக்கோ சிஸ்டம் கர்நாடகாவில் நன்றாக இருக்கிறது. உற்பத்தி துறைக்கான வாய்ப்புகளும் இங்கே உள்ளன. இது தவிர தகவல்தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மெட்ரோ கலாச்சாரம் போன்றவை அகில இந்திய அளவில் இருந்து கார்ப்பரேட் துறையினரை பெங்களூர் நோக்கி ஈர்க்கிறது என்கிறார்.

சிலிக்கான்வேலி
கர்நாடக மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஐடி துறையின் பங்களிப்புதான், மூன்றில் இரண்டு பங்கு என்பது அதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. உலகமே டிஜிட்டல்மயமாகி மாறிக்கொண்டிருக்கிறது. எனவே, இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படக்கூடிய பெங்களூரு நகரிலும் வேலை வாய்ப்பு பெருகி கொண்டு இருக்கிறது என்கிறார் ஹன்டர்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் கிரிஷ் லக்ஷ்மிகாந்த்.

கோவா பெட்டர்
கர்நாடகாவுக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு இன்மையை, குறைப்பதில் முன்னேற்றம் அடைந்துள்ள அடுத்த மாநிலம் கோவா. 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12.4 சதவீதமாக இருந்த வேலையில்லாத் திண்டாட்டம், இந்த ஆகஸ்ட் மாதத்தில் 3.7 சதவீதமாக குறைந்துள்ளது. மேகாலயாவில் 1.6%, சிக்கிம் மாநிலத்தில் 2.1%, தெலுங்கானாவில் 2.4 சதவீதம் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. மிகப்பெரிய மாநிலமாக இருப்பினும் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதில், முதலிடத்தை கர்நாடகா பிடித்திருப்பதை, முக்கியமாக பார்க்க முடிகிறது.












Click it and Unblock the Notifications