சென்னபட்டணா சிக்கல்.. கூட்டணியிலுள்ள குமாரசாமிக்கும், பாஜகவுக்கும் பத்திகிச்சே!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் சென்னபட்டணா சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் குமாரசாமியும் பாஜக தலைவர்களும் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னபட்டணா தொகுதியில் பாஜகவின் யோகேஷ்வர், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என மத்திய அமைச்சர் குமாரசாமி வலியுறுத்தி வருவதற்கு பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 13-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த 3 தொகுதிகளில் சிக்காவி, சண்டூரில் பாஜக போட்டியிடுகிறது. இந்த 2 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களையும் பாஜக அறிவித்துள்ளது. இந்த தொகுதிகளில் தற்போது வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.

சென்னபட்டணா தொகுதி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகுதியில் பாஜகவின் யோகேஷ்வர் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளார். இதனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் குமாரசாமி கூறுகையில், லோக்சபா தேர்தலில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் மஞ்சுநாத், பாஜக சின்னத்தில் போட்டியிட்டார். தற்போது சென்னபட்டணா தொகுதியில் நாங்கள் போட்டியிடுவது உறுதி. பாஜகவின் யோகேஷ்வர் போட்டியிட விரும்பினால் எங்கள் கட்சியின் சின்னத்தில் போட்டியிடலாம். ஆனால் யோகேஷ்வரை காங்கிரஸ் வளைத்துப் போட்டு களமிறக்கவும் முயற்சிக்கிறது. இதனால் பாஜக மேலிடம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என காத்திருக்கிறோம் என்றார்.
ஆனால் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா, சென்னபட்டணா தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. அந்த தொகுதியின் வேட்பாளரை அந்த கட்சிதான் முடிவு எடுக்க வேண்டும். இதற்காக பாஜகவின் யோகேஷ்வரை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என மத்திய அமைச்சர் குமாரசாமி நிபந்தனை விதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது; அந்தப் பேச்சுக்கே இடம் இல்லை என்றார். இதனால் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே மோதல் வலுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications