கர்நாடகா பாஜக தலைவராக மத்திய அமைச்சர் ஷோபா? தமிழ்நாட்டுக்கு சிக்னலா? அதிரடிக்கு தயாராகும் டெல்லி?
பெங்களூர்: கர்நாடகா மாநில பாஜக தலைவராக மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே நியமிக்கப்படக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள். மேலும் 5 மாதங்களாகியும் நியமிக்கப்படாத கர்நாடகா மாநில எதிர்க்கட்சித் தலைவர் பதவி பசனகவுடா பட்டீல் யத்னாலுக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக பெரும் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து கர்நாடகா பாஜக தலைவர் நளின் குமார் கட்டில் தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கர்நாடகா மாநில புதிய பாஜக தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. மேலும் கர்நாடகா மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. ஆனால் இந்த இரு பதவிகளுக்கும் கர்நாடகா பாஜக தலைவர்கள் முட்டி மோதியதால் இழுபறி நீடித்தது.

புதிய தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் யார்?: கர்நாடகா மாநில பாஜக தலைவர் பதவிக்கு மகன் விஜயேந்திராவை நியமிக்க காய்கள் நகர்த்திப் பார்த்தார் எடியூரப்பா. ஆனால் டெல்லி மேலிடம் இதற்கு பிடி கொடுக்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி விட்டுக் கொடுக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது. இருந்தாலும் எந்த ஒரு முடிவையும் டெல்லி பாஜக மேலிடம் எடுக்கவில்லை.
மத்திய அமைச்சர் ஷோபா: இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜேவை கர்நாடகா மாநில பாஜக தலைவராக நியமிக்க டெல்லி மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. அண்மையில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, தெலுங்கானா மாநில பாஜக தலைவராகவும் புரந்தரேஸ்வரி ஆந்திரா மாநில பாஜக தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். இந்த வரிசையில் மற்றொரு மத்திய அமைச்சரான ஷோபா, கர்நாடகா பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட இருக்கிறார் என்கின்றன டெல்லி தகவல்கள்.
ஒக்கலிகா ஓட்டு வங்கிக்கு வேட்டு?: கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருப்பவர் துணை முதல்வர் டிகே சிவகுமார். இவர் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர். கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு ஒக்கலிகா சமூக வாக்குகள் முதன்மை காரணமாக அமைந்தது என கூறப்படுகிறது. தற்போது அதே ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஷோபாவை, கர்நாடகா பாஜக தலைவராக்க டெல்லி மேலிடம் அதிரடியாக முடிவு எடுத்திருப்பது என்பது ஒக்கலிகா ஓட்டுகளை சிதறடிக்கும் முயற்சி எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜக கூட்டணியில் ஒக்கலிகா ஓட்டு வங்கியை மட்டுமே நம்பி இருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இடம் பெற்றிருப்பதால் காங்கிரஸின் ஓட்டு வங்கிக்கு பெரும் வேட்டு வைக்க முடியும் என்பது பாஜக மேலிடத்தின் கணக்கு எனவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டுக்கு சிக்னல்: தென்னிந்தியாவில் பாஜக எந்த ஒரு மாநிலத்திலும் ஆட்சியில் இல்லை. இதனால் தென்னிந்திய மாநிலங்களில் பாஜகவின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் அக்கட்சி மேலிடம் தீவிரமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் வலுவான கூட்டணி கட்சியான அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட்டு விலகியது பெரும் பின்னடைவாக இருக்கிறது. இதற்கு காரணமே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் அணுகுமுறை என்பது வெளிப்படையான ஒன்று. 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் புதிய ஒருவர் நியமிக்கப்படலாம் என ஏற்கனவே கூறப்படுகிறது. அத்துடன் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் அல்லது தலைவர் பதவி ஆகியவை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை மையமாக வைத்து சுழன்று கொண்டிருக்கிறது. தற்போது கர்நாடகா பாஜக தலைவராக மத்திய அமைச்சர் ஷோபா நியமிக்கப்பட்டால் அது தமிழ்நாட்டுக்கான சிக்னலாகவும் இருக்கலாம் என்றும் மூத்த பத்திரிகையாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications