தீண்டாமை மனதில் மட்டுமே இருக்கிறது.. அது வேதங்களில் இல்லை.. மோகன் பகவத் பேச்சு!
பெங்களூரு: இந்தியாவில் மதமாற்றம் பிரிவினைவாதத்திற்கு வழிவகுக்கிறது எனவும், மதமாற்றத்தை தடுக்க பாடுபட வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், சித்ரதுர்காவில் உள்ள ஸ்ரீ சிவசரண் மதரா சன்னையா குருபீடத்தில் இரண்டு நாட்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பல்வேறு மடங்களின் 21 குருமார்கள் கலந்துகொண்டனர்.

மதமாற்றம் தடுக்க வேண்டும்
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், நாட்டில் நடைபெற்று வரும் மதமாற்றத்தை தடுக்க பாடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியா இந்தியாவாகவே இருக்க வேண்டும் என்றால் இதுபோன்ற மதமாற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். அவற்றை நாம் தடுக்காவிட்டால், சமூகத்தில் பிளவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் நம்பிக்கை
அதேபோல், வரும் காலங்களில் குருமார்கள் சமுக முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளும் அனைத்து பணிகளுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கம் ஆதரவு அளிக்கும். குருமார்கள் தங்கள் வழியில் சமூகத்தை மாற்ற வேண்டும். ஆர்எஸ்எஸ் முறையான மாற்றம் மீது நம்பிக்கை வைத்துள்ளது. அது மெதுவாகவும் நிலையானதாகவும் நடக்க வேண்டும்.

தீண்டாமை பற்றி பேச்சு
சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவு மக்களையும் ஒன்றிணைக்க வேண்டிய நேரம் இது. இது மனங்களை ஒன்றிணைப்பதன் மூலம் நடைபெறலாம். தீண்டாமையும், சமத்துவமின்மையும்தான் இந்து சமூகத்தில் உள்ள பிரச்னை. இது மனதளவில் மட்டுமே உள்ளது, வேதத்தில் இல்லை. பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் தீமைகளை அகற்ற வேண்டும். நம் மனதில் இருக்கும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண கால தாமதம் ஆகலாம்.

பொறுமை தேவை
அதுவரை ஒடுக்கப்பட்ட மக்கள் பொறுமை காக்க வேண்டும். இத்தகைய சமூக சமத்துவமின்மையை அகற்ற ஆர்எஸ்எஸ் கடுமையாக உழைக்கிறது. தொடர்ந்து பேசுவதன் மூலமாகவும், ஆலோசிப்பதன் மூலமாகவும் மட்டுமே அனைவரையும் ஒன்றிணைக்க முடியும். இந்த பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். நிச்சயம் அது ஒரு நாள் நடக்கும். இந்து மதத்தில் அனைவரும் ஒன்று என்று தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் பகவத் பகவத் Z பிளஸ் பாதுகாப்புடன் கூடிய விவிஐபி என்பதால், கடந்த இரண்டு நாட்களும் அந்தப் பகுதியே காக்கி கோட்டையாக மாறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications