நாங்க 34 எம்எல்ஏக்கள்- எங்களுக்குதான் முதல்வர் பதவி-காங்-க்கு நெருக்கடி தரும் வீரசைவ லிங்காயத்துகள்!
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவியை வீரை சைவ லிங்காயத் பிரிவினருக்கு தர வேண்டும் என அந்த அமைப்பினர் காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்தியிருப்பது புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
கர்நாடகா தேர்தலில் அமோக வெற்றியை பெற்ற காங்கிரஸ் கட்சியால் இன்னமும் முதல்வர் யார் என்பதை முடிவு செய்யவில்லை. கர்நாடகா முதல்வர் பதவிக்கான போட்டியில் சித்தராமையா, டிகே சிவக்குமார் (சிவகுமார்) முன்னணியில் உள்ளனர்.

சித்தராமையாவைப் பொறுத்தவரை கர்நாடகா முழுவதற்குமான பரந்துபட்ட தலைவர்; குருபா ஜாதியை சேர்ந்தவர்; இருப்பவர்களிலேயே சீனியர. அதனால் அவருக்குதான் அதிக வாய்ப்பு என்கிறது ஒரு தரப்பு. ஆனால் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்; இத்தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றிக்கு அசைக்க முடியாத காரணகர்த்தா என்பதால் டிகே சிவக்குமாரைத்தான் முதல்வராக்க வேண்டும் என்கிறது இன்னொரு தரப்பு.
இது தொடர்பாக கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கருத்தை பார்வையாளர்கள்
காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கார்கேவிடம் சமர்ப்பித்தும் உள்ளனர். தற்போதும் டெல்லியில் புதிய முதல்வர் யார் என்பதற்கான ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வீரசைவ லிங்காயத்துகள், தங்கள் சமூகத்துக்குதான் முதல்வர் பதவி தரப்பட வேண்டும் என்கின்றனர். இது தொடர்பாக வீரசைவ லிங்காயத்துகள்- மகாசபை தலைவரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சாமனூர் சிவசங்கரப்பா, காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், 46 வீரசைவ லிங்காயத் சமூகத்தினருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் 34 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதாவது 74% பேர் வென்றுவிட்டோம். காலம் காலமாக பாஜகவுக்கு வாக்களித்த லிங்காயத்துகள் இம்முறை காங்கிரஸை நம்பி வாக்களித்துள்ளனர். இதனால்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியால் 135 இடங்களில் வெல்லவும் முடிந்தது. வரும் லோக்சபா தேர்தலிலும் இதே ஆதரவு நீடித்தால் கணிசமான இடங்களை காங்கிரஸ் பெற முடியும். ஆகையால் முதல்வர் பதவி மற்றும் முக்கிய துறைகளை லிங்காயத்துகளுக்கு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது காங்கிரஸுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications