‛‛அல்லல்படும் ஐடி ஊழியர்கள்’’.. தண்ணீர் தட்டுப்பாட்டால் மோசமான பெங்களூர்.. இப்படியெல்லாமா நடக்குது?
பெங்களூர்: பெங்களூரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால் அங்குள்ள மக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் ஐடி ஊழியர்கள் உள்பட பொதுமக்கள் தண்ணீர் பிரச்சனையை எப்படி சமாளிக்கின்றனர் என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரின் தண்ணீர் தேவை என்பது மொத்தம் 2 வழிகளில் தான் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஒன்று காவிரி நீர். இதனை பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இன்னொன்று நிலத்தடி நீர். நிலத்தடி நீரை பொறுத்தமட்டில் பொதுமக்கள் போர்வெல் அமைத்து தண்ணீரை எடுத்து பிற பயன்பாட்டுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் தற்போது பெங்களூரில் பருவமழை என்பது குறைவாக பெய்தது. மேலும் கோடை துவங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தி எடுக்கிறது. இதனால் அங்கு நிலத்தடி நீர்மட்டம் என்பது மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளன. பெங்களூரின் புறநகர் பகுதிகளில் 30 சதவீத போர்வெல்கள் தண்ணீரின்றி வறண்டுப்போய் உள்ளன.
இதனால் பொதுமக்கள் டேங்கர்களில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீரை பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிடபிள்யூஎஸ்எஸ்பி எனும் பெங்களூர் மாநகர குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் வினியோகம் செய்யப்படும் காவிரி நீரை குடிநீருக்கு பதில் வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயில் காரணமாக தண்ணீர் பிரச்சனை என்பது தொடர்ந்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது பாதிக்க தொடங்கி உள்ளது. இதனால் சிலர் தண்ணீர் பிரச்சனையால் பெங்களூரில் இருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி உள்ளனர். மார்ச் மாதத்திலேயே இப்படியான சூழல் என்றால் கோடை மாதங்களான ஏப்ரல், மே மாதங்களில் தண்ணீர் பிரச்சனை இன்னும் அதிகரிக்கும் என்பதால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் தற்போது பெங்களூரில் நிலவும் தண்ணீர் பிரச்சனையால் மோசமாகி வரும் நிலையை சமாளிக்க பள்ளி, தனியார் நிறுவனங்களும், பொதுமக்களும் சில விஷயங்களை கடைப்பிடித்து வருகின்றனர். அதன் விபரம் வருமாறு:
வீட்டில் இருந்தே வேலை: அதன்படி பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை ‛வொர்க் ப்ரம் ஹோம்' பணி மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளன. ஊழியர்களும் வீட்டில் இருந்தே பணியை தொடங்கி உள்ளனர். நிறுவனங்களுக்கு ஊழியர்கள் சென்றால் அங்கு அவர்களின் தேவையான தண்ணீர் வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்களில் உணவு: மேலும் பொதுமக்களும் பலரும் ஹோட்டல்களில் உணவு வாங்கி சாப்பிட தொடங்கி உள்ளனர். வீட்டில் சமையல் செய்யும்போது பாத்திரங்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு தண்ணீர் தேவையாக உள்ளது. ஆனால் தண்ணீர் பிரச்சனை உள்ளதால் பலரும் ஹோட்டல்களில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகின்றனர்.
யூஸ் அண்ட் த்ரோ பயன்பாடு: மேலும் வீடுகளில் யூஸ் அண்ட் த்ரோ வகையிலான தட்டு, கப், டம்ளர்களை மக்கள் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். அதேபோல் டீக்கடைகள், ஓட்டல்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் தட்டு, கப், டம்ளர்களை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர பலர் மால்களில் சென்று கழிவறைகளை பயன்படுத்தி வருகின்றனர். அதோடு ஒருநாள் விட்டு ஒருநாள் குளிப்பதை பழக்கமாக்கி வருகின்றனர். மேலும் பள்ளிகள், பயிற்சி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் கைவிடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி உள்ளன.
குளிப்பது இல்லை: இதுபற்றி கேஆர் புரத்தில் வசித்து வரும் சுஜாதா கூறுகையில், ‛‛பாத்திரம் சுத்தம் செய்வது, சமையல் செய்வது துணி துவைப்பது என அனைத்தும் தண்ணீர் பிரதானமாக உள்ளது. ஆனால் தண்ணீர் என்பது பற்றாக்குறையாக உள்ளது. இதனால் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் தட்டு, டம்ளர்களை பயன்படுத்தி வருகிறோம். மேலும் வாரத்துக்கு 2 முறை ஹோட்டல்களில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகிறோம். வாரம் ஒருமுறை மட்டுமே வாஷிங் மெஷினை பயன்படுத்தி வருகிறோம். தினமும் குளிப்பதையும் தவிர்த்து வருகிறோம்'' என்றார்.
சொந்த ஊர் செல்ல முடிவு: அதேபோல் சிங்கசந்திராவில் வசித்து வரும் ஐடி ஊழியர் லட்சுமி கூறுகையில், ‛‛என் நிறுவனத்தில் வீட்டில் இருந்து வேலை செய்யும் வசதியை கோரி வருகிறேன். இந்த ஆப்ஷன் கிடைக்கும் பட்சத்தில் சொந்த ஊரான தமிழ்நாட்டின் திருச்சிக்கு செல்லவும், அங்கிருந்தே வேலை செய்யவும் முடிவு செய்துள்ளேன். தண்ணீர் பிரச்சனை சரியான பிறகு பெங்களூர் வர உள்ளேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications