வயசானாலும் லாலு ஸ்டைல் மட்டும் போகலை! பிரதமர் பதவியில் இருந்து மோடிக்கு பிரியாவிடை தருவோமாம்!
பெங்களூர்: பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடிக்கு பிரியா விடைதரவே பெங்களூரில் ஒன்று கூடி இருக்கிறோம் என ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற 26 எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் உடல்நலன் பாதிப்பு, முதுமை நிலைமையிலும் லாலு பிரசாத் யாதவ் பங்கேற்றார். லாலு பிரசாத் செய்தியாளர்களிடம் பேசும் ஒவ்வொரு கருத்தும் நகைச்சுவையாகவும் நறுக்கு தெரித்ததாகவும் இருக்கும். இவ்வளவு வயதான போதும் லாலு பிரசாத் யாதவும் முழு பார்மில்தான் இருக்கிறார் என்பதாகவே பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த போது உணர முடிந்தது.

பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடிக்கு பிரியா விடை தரப் போகிறோம். அதற்காகவே பெங்களூருவில் ஒன்று கூடி இருக்கிறோம் என்றார்.
இதேபோல பெங்களூரு கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் தெரிவித்த கருத்துகள்:
மல்லிகார்ஜூன கார்கே (காங்கிரஸ்): கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மக்கள் நலனுக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும். 26 அரசியல் கட்சிகள் பெங்களூரில் ஒன்று கூடி இருக்கிறோம். 11 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். பாஜக தனித்துப் போட்டியிட்டு 303 இடங்களை பெறவில்லை. கூட்டணி கட்சிகளுடன் போட்டியிட்டு இந்த இடங்களைப் பெற்றது. ஆனால் ஆட்சியில் அமர்ந்ததும் கூட்டணி கட்சிகளை ஒழித்து கட்டிவிட்டது பாஜக. காங்கிரஸ் கட்சிக்கு அதிகார பசியில்லை; பிரதமர் பதவியும் இலக்கு அல்ல. அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க வேண்டும். ஜனநாயகம், சமூக நீதி, மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் இலக்கு.
மெகபூபா முப்தி(பிடிபி): அரசியல் சட்ட அமைப்பும் ஜனநாயகமும் உதாசீனப்படுத்தப்படுகிறது. இந்தியாவை காப்பாற்றவே அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று திரண்டிருக்கிறோம்.
அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி) : பெங்களூரு ஆலோசனை கூட்டம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மிக முக்கியமானது.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்): எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்துகிறோம். இது நாட்டு மக்களுக்கு நல்லது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பது முக்கியமானது. அதனை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம்.
ஒமர் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி): நாட்டில் அனைத்துமே தவறான நிகழ்வுகளாக இருக்கின்றன. அரசியல் சாசனம் நிர்மூலமாக்கப்படுகிறது; மதச்சார்பின்மை சீர்குலைக்கப்படுகிறது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி): 10 ஆண்டுகளாக தேசத்தை ஆண்ட பிரதமர் மோடி நாட்டின் அனைத்து துறைகளையும் சீரழித்துவிட்டார். மக்களிடையே வெறுப்புணர்வை விதைத்துள்ளார். நாட்டின் பொருளாதாரமும் நாசமாகி விட்டது. ஆகையால் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.












Click it and Unblock the Notifications