தேர்தல் அரசியலுக்கு குட்பை சொன்ன எடியூரப்பா! ஆனா அடுத்து சொன்ன வார்த்தை ரொம்ப முக்கியம்! பரபர பேச்சு
சினா: கர்நாடகாவில் தேர்தலில் மீண்டும் போட்டியிட மாட்டேன் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூர்: அடுத்து சில மாதங்களில் கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை எடியூரப்பா அறிவித்துள்ளது அக்கட்சி தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதற்கு முன்பு இந்தாண்டு சுமார் 9 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பெரும்பாலானவற்றில் பாஜகவே ஆட்சியில் உள்ளது.
இதனால் இந்த சட்டசபைத் தேர்தல்களில் தோல்வியடையக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதில் கர்நாடக தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

கர்நாடக தேர்தல்
ஏனென்றால் தென்மாநிலங்களில் இதுவரை பாஜக ஆட்சியை அமைத்த ஒரே மாநிலமான கர்நாடகா உள்ளது. இதனால் அங்கு எப்படியாவது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவே பாஜக விரும்பும். கடந்த தேர்தலிலேயே தனிப்பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில், இந்த தேர்தலில் நிச்சயம் தனிப்பெரும்பான்மை பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அதேநேரம் பாஜகவுக்கு இதுவரை கர்நாடகாவில் இருந்து வெளியாகும் தகவல்கள் பாஜகவுக்கு நல்லதாக இல்லை.

பாஜக
அங்கு மக்களிடையே செல்வாக்கு மிக்க தலைவராகவும் கடந்த காலங்களில் கர்நாடகாவில் பாஜக வேரூன்றக் காரணமாக இருந்தவருமான எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதே அங்குப் பலருக்கும் பிடிக்கவில்லை.. இது மட்டுமின்றி பசவராஜ் பொம்மை அரசின் மீதான பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் பாஜகவுக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், எடியூரப்பாவுக்குப் பொம்மை அரசின் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்று குற்றச்சாட்டுகளும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

போட்டி இல்லை
இதனிடையே கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா, தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாகவும், மாநிலத்தில் சில மாதங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார். இது பாஜகவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று சில வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் கூட கர்நாடக முழுக்க சுற்றுப்பயணம் செய்து பாஜகவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர வைக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று அவர் தெரிவித்தார்

சுற்றுப்பயணம்
பெலகாவியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அடுத்து நடக்கும் தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்பு இல்லை. நான் ஏற்கனவே எம்எல்ஏ மற்றும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். எனக்கு ஏற்கனவே 80 வயதாகிவிட்டது. எனவே மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்.. மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்குவேன். பாஜகவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்று அவர் தெரிவித்தார்.

எடியூரப்பா
கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ஜூலை 2021இல் ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக பஸ்வராஜ் பொம்மை முதல்வராக நியமிக்கப்பட்டார். கடந்த காலங்களில் பாஜக கர்நாடகாவில் வெல்லக் காரணமாக இருந்தவர் எடியூரப்பா. இருப்பினும், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், பசவராஜ் பொம்மை அரசு மீதும் கடும் அதிருப்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. எடியூரப்பா இப்போது மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக அறிவித்த நிலையில், அது தேர்தல் அரங்கில் பாஜகவுக்கு கை கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

காங்கிரஸ்
கர்நாடக தேர்தலை பாஜக மட்டுமில்லாமல் காங்கிரஸ் கட்சிக்கும் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் இப்போது காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்றாகக் கர்நாடகா உள்ளது. அங்கு சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் தலைமையில் செயல்படும் காங்கிரஸ் கட்சிக்குச் செல்வாக்கு அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளிலும் கூட காங்கிரஸ் கட்சிக்கே கர்நாடகாவில் அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications