கர்நாடகா தேர்தல்.. பிரதமர் மோடியின் டின்னரை புறக்கணித்த நடிகர் சுதீப்..காங்., சாதகமா? பின்னணி என்ன?
பெங்களூரில் பிரதமர் நரேந்திர மோடி கன்னட நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களை சந்தித்து இரவு விருந்து அளித்தார். இதில் நடிகர் கிச்சா சுதீப் பங்கேற்கவில்லை.
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி கன்னட நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களை திடீரென சந்தித்ததோடு, இரவு விருந்து வழங்கினார். இந்த விருந்தில் ‛கேஜிஎப்' ஹீரோ யஷ், ‛காந்தாரா' இயக்குனரும், ஷீரோவுமான ரிஷப் ஷெட்டி மற்றம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், கிரிக்கெட் வீரர்களான மணிஷ் பாண்டே, மயங்க் அகர்வால் உள்பட பலர் பங்கேற்ற நிலையில் நடிகர் கிச்சா சுதீப் பங்கேற்றவில்லை. இது விவாதத்தை கிளப்பியது. கிச்சா சுதீப்பை காங்கிரஸ் கட்சியில் இணைக்க முயற்சிகள் நடந்து வரும் நிலையில் பிரதமர் மோடி உடனான டின்னரை அவர் புறக்கணித்தது பேசுபொருளான நிலையில் உண்மையில் என்ன நடந்தது? என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலத்துக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் வரும் தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவலாம் என கூறப்படுகிறது.
ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும், செல்வாக்கை நிரூபிக்க ஜனதாதளம் (எஸ்) கட்சியும், புதிய வருகையாக ஆம்ஆத்மியும் இந்த தேர்தலில் களமிறங்க உள்ளது. இதுதவிர பிற கட்சிகளும் கோதாவில் குதிக்க உள்ளன.

நடிகர்களுடன் பிரதமர் மோடி இரவு விருந்து
இந்நிலையில் தான் பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி பெங்களூர் சென்றார். பெங்களூர் ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி தங்கிய நிலையில் கர்நாடகாவின் சினிமா, விளையாட்டு, சமூக வலைதள பிரபலங்கள் என 20க்கும் அதிகமானவர்களை சந்தித்து பேசியதோடு அவர்களுக்கு இரவு விருந்து அளித்தார். இதில் ‛கேஜிஎப்' பட ஹீரோ யஷ், ‛காந்தாரா' படத்தின் இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி, மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி, யூடியூப் பிரபலம் ஷ்ரத்தா ஜெயின், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, முன்னாள் வீரர்கள் ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், தற்போதைய கிரிக்கெட் வீரர்களான மணிஷ் பாண்டே, மயங்க் அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நடிகர் சுதீப்பால் எழுந்த விவாதம்
இதில் கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் கிச்சா சுதீப் பங்கேற்றவில்லை. கர்நாடகாவில் பெரும் ரசிகர் பட்டாளம் கிச்சா சுதீப்புக்கு உள்ள நிலையில் இது விவாதத்தை கிளப்பியது. அதாவது கிச்சா சுதீப் பாஜக வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்தாலும் கூட பிரதமர் நரேந்திர மோடி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்படவில்லை என ஒரு தரப்பு கூறிய நிலையில், மற்றொரு தரப்பு வேறு காரணத்தை கூறியது. அதாவது நடிகர் சுதீப்பை காங்கிரஸ் கட்சியில் இணைக்க சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதோடு, சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரை அவர் சந்தித்த நிலையில் வரும் தேர்தலில் கிச்சா சுதீப் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது எனவும் கொளுத்தி போட்டனர்.

டின்னரை புறக்கணித்த சுதீப்
இந்நிலையில் தான் உண்மையில் என்ன நடந்தது? என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிரதமர் நரேந்திர மோடி தரப்பில் இருந்து நடிகர் கிச்சா சுதீப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததும், சுதீப் தான் பிரமதர் நரேந்திர மோடியின் டின்னரை புறக்கணித்து இருப்பதும் உறுதியாகி உள்ளது. மேலும் எதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் டின்னரில் பங்கேற்கவில்லை எனவும் நடிகர் சுதீப் தரப்பில் இருந்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சுதீப் கூறியுள்ளதாவது:

சுதீப் சொன்னது என்ன?
பிரதமர் நரேந்திர மோடி தரப்பில் இருந்து டின்னரில் பங்கேற்க அழைப்பு வந்தது. பிரதமர் மோடியின் அலுவலகத்தில் இருந்து எனக்கு போன் வந்தது. இதனை நான் பெருமையாக கருதுகிறேன். நான் தான் அங்கு செல்லவில்லை. அன்றைய தினம் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்தது. காய்ச்சல் இருந்தது. பிரதமரை சந்திக்க பல நெறிமுறைகள் உள்ளன. சளி, காய்ச்சல் இருந்ததால் அவரை நான் சந்திக்வில்லை. காய்ச்சலில் நான் சென்றால் சரியாக இருக்காது என கருதினேன். இதனால் சம்பந்தப்பட்டவர்களிடம் தகவலை கூறினேன். பிரதமர் மோடி மீது எனக்கு மரியாதை உள்ளது. துரதிர்ஷ்டவசமாக என் உடல் நலக்குறைவால் அவரை சந்திக்கும் வாய்ப்பை இழந்தேன்'' என தெரிவித்துள்ளார். இதன்மூலம் பிரதமர் நரேந்திர மோடி நடிகர் சுதீப்பை அழைக்கவில்லை என பரவிய கேள்விக்கும், பிரதமர் நரேந்திர மோடியின் டின்னரை சுதீப் புறக்கணித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளார் என பரவிய விஷயத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications