ஆஹா.. இதுதான் சொந்த காசில் சூனியமா? டிகே சிவக்குமார் உத்தரவால் அவருக்கே விழுந்த ரூ.50,000 அபராதம்!
பெங்களூர்: சொந்த பணத்தில் சூனியம் வைப்பதுபோல் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் போட்ட உத்தரவு ஒன்று அவரது கட்சிக்கே ஆபத்தாக மாறியுள்ளது. அதோடு பெங்களூர் மாநகராட்சி சார்பில் காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் டிகே சிவக்குமாரின் பெயரில் ரூ.50 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் உள்ளனர். டிகே சிவக்குமார் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவராகவும் தொடர்கிறார்.

மேலும் துணை முதல்வர் பதவியோடு அமைச்சரவையில் மிகவும் முக்கிய இலாகாக்காளை நிர்வகித்து வருகிறது. அதன்படி டிகே சிவக்குமார் நீர்ப்பாசனத்துறை மற்றும் பெங்களூர் நகர அபிவிருத்தி துறையை வைத்து வருகிறார். அதோடு பெங்களூர் நகர பொறுப்பு அமைச்சராகவும் டிகே சிவக்குமார் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் பெங்களூர் மாநகராட்சி எல்லையில் விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்படுவதும், இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படும் நடக்கிறது. இதனால் பெங்களூரில் விதிகளை மீறி பேனர் வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பேனர் வைக்க கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
அதோடு அனுமதியின்றி சட்டவிரோதமாக பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் பெங்களூர் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. பெங்களூர் நகர அபிவிருத்தி துறை அமைச்சர் என்ற முறையில் டிகே சிவக்குமார் போட்ட உத்தரவால் பெங்களூர் மாநகராட்சி இந்த எச்சரிக்கை வெளியிட்டது. மேலும் விதிமீறும் பேனர் வைக்கும் நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். இதனை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் டிகே சிவக்குமார் தெரிவித்து இருந்தார்.
இத்தகைய சூழலில் தான் டிகே சிவக்குமாரின் இந்த உத்தரவு தற்போது அவருக்கே ஆபத்தாக மாறியுள்ளது. அதாவது கர்நாடகா காங்கிரஸ் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் மறைந்த கர்நாடகா முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் ஆகியோரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக பெங்களூர் குயின்ஸ் ரோட்டில் காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் அணி சார்பில் ராஜீவ் காந்தி, தேவராஜ் அர்ஸ் ஆகியோரின் போட்டோவுடன் பேனர் வைக்கப்பட்டது.
இந்த பேனர் அனுமதியின்றி விதிகளை மீறி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் பேனரை அகற்றினர். அதோடு விதிகளை மீறி பேனர் வைத்ததாக கூறி காங்கிரஸ் கட்சிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக டிகே சிவக்குமார் உள்ளார். இதனால் அபராதத்தொகையை கட்டும்படி அவரது பெயரில் ரசீது போடப்பட்டுள்ளது. பெங்களூரில் நகரில் சட்டவிரோத பேனர்கள் வைத்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என டிகே சிவக்குமார் கடந்த 13 நாட்களுக்கு முன்பு கூறிய நிலையில் தற்போது அவருக்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications