நல்ல காலத்துலயே வம்பு பண்ணுவாங்களே..திடீரென காவிரியிலிருந்து கர்நாடகா தண்ணீர் திறக்கும் பின்னணி என்ன
Recommended Video
பெங்களூர்: நல்ல காலத்திலேயே, காவிரியில் தண்ணீர் திறக்க முரண்டு பிடிக்கும், கர்நாடக அரசு, இன்று திடீரென தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
உண்மைதான். முதல்வர் குமாரசாமி இன்று காவிரி நீர்ப்பாசன வாரிய அதிகாரிகளுடன் பெங்களூரில் ஆலோசனை நடத்திய நிலையில், இந்த அறிவிப்பை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
கர்நாடக கூட்டணி அரசு தலை மீது கத்தி தொங்கிக் கொண்டுள்ளது. காங்கிரசின் 11 எம்எல்ஏக்களும், மஜதவின் 3 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

பரபரப்பு செய்தி
மஜத கட்சியின் பிற எம்எல்ஏக்கள் நேற்றே குடகு மாவட்டத்திலுள்ள ரிசார்ட்டுக்கு ஷிப்ட் செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் பதவி விலக பாஜக கோரிக்கை விடுத்து வருகிறது. நாளை, போராட்டமும் நடத்த உள்ளது. மொத்த டிவி சேனல்களும், அது கன்னடமோ அல்லது ஆங்கிலமோ, கர்நாடக செய்திகளை பிரேக்கிங்காக போட்டுக் கொண்டு உள்ளன. ஆனால், முதல்வரோ, காவிரி நீர்பாசன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபடி இருந்தார்.
|
ஆலோசனை கூட்டம்
காவிரி, கிருஷ்ணா நிதி நீர் விவகாரங்கள் குறித்து, பெங்களூரிலுள்ள அரசு இல்லமான, 'கிருஷ்ணாவில்' அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். சூட்டோடு சூடாக, தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கவும் பரிந்துரைத்துள்ளார். முதல்வரின் இந்த நடவடிக்கைகள் நடப்பு அரசியல் கலவரங்களில் இருந்து வேறுபட்டதாக, வித்தியாசமாக தெரிகிறதே என கர்நாடக அரசுத்துறை வட்டாரத்தில் கேட்டோம்.

குமாரசாமி நம்பிக்கை
இதுகுறித்து கர்நாடக அரசு தரப்பிலும், மஜத கட்சி வட்டாரத்திலும் கூறியதாவது: குமாரசாமியை பொறுத்தளவில், எப்படியும் முதல்வர் பதவிக்கு வந்த ஆபத்து விலகி விடும் என நம்புகிறார். அமைச்சரவையை புதிதாக அமைக்க ஏதுவாக, ஏற்கனவே அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். எனவே, குறைந்தபட்சம் 10 அதிருப்தி எம்எல்ஏக்களாவது அமைச்சராகும் ஆசையில் திரும்ப வந்துவிடுவார்கள் என நினைக்கிறார்.

தமிழக பாணி
மற்றொரு பக்கம், எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய காங்கிரஸ் சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதையும் குமாரசாமி பெரிதாக நம்புகிறார். தமிழகத்தில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ததை போல, இங்கும், அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர், நடவடிக்கை எடுப்பார் என்பது குமாரசாமி நம்பிக்கை. எனவே பதற்றத்தை வெளியே காட்ட கூடாது. அதிருப்தியாளர்களுக்கு தான் ரொம்பவே ஸ்ட்ராங்காக இருப்பதை போல காட்ட வேண்டும் என நினைக்கிறார்.

காவிரி அரசியல்
இதன் ஒரு பகுதியாகத்தான், கர்நாடக அரசுக்கு ஆபத்து இல்லை என்றும், நான் அரசியல் விவகாரங்களால் கவலைப்படவில்லை என்றும், திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தனது வார்த்தைக்கு உருவம் கொடுக்கும் வகையில் பதற்றமே இல்லாதது போன்ற தோற்றத்தை அவர் உருவாக்க பார்க்கிறார். எனவே, காவிரி விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதன் மூலம், பொதுமக்கள் கவனம் தண்ணீர் விவகாரத்திற்கு திசை திரும்ப வேண்டும் என்றும், மண்டியா உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகளில் மஜத பலமாக இருப்பதால், அங்கு தேர்ந்தெடுக்கப்பட்டு ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் மீது விவசாயிகள் கோபம் திரும்ப வேண்டும் என்றும் குமாரசாமி நினைக்கிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications