கள்ளக்காதலுக்காக கணவனை கொன்ற இன்ஸ்டா பிரபலம்! சிக்கியது எப்படி? மனைவியின் அண்ணனுக்கு பாராட்டு ஏன்?
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் காதல் கணவனை தலையணையால் அழுத்தி கொலை செய்த வழக்கில் இன்ஸ்டா பிரபலமான மனைவி கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் அஜீக்கர் கிராமத்தைச் சேர்ந்த காதல் தம்பதி பாலகிருஷ்ணன் சல்யாண்- பிரதிமா. இவர்களுக்கு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில தினங்களாக அடிக்கடி நோயால் அவதிப்பட்ட பாலகிருஷ்ணன், மேற்கொண்டு சிகிச்சை மேற்கொள்ள விரும்பவில்லை.

இதனால் தனது வீட்டிற்கு வந்தார். மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட அன்று இரவு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தனது கணவர் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார் என அனைவரிடமும் பிரதிமா சொல்லி நம்ப வைத்துள்ளார்.
இதே கதையை தனது அண்ணன் சந்தீப்பிடமும் பிரதிமா தெரிவித்துள்ளார். இதையடுத்து பாலகிருஷ்ணனை அடக்கம் செய்வதற்கான ஆயத்த பணிகள் நடந்து வந்தன. அப்போது பாலகிருஷ்ணனின் முகத்தில் நகக் கீரல்களும் ரத்தக் கறையும் இருந்ததை சந்தீப் பார்த்துவிட்டார்.
உடனே பிரதிமாவை அழைத்து சந்தீப் கேட்ட போது, நம் அண்ணன்தானே என நினைத்து, "எப்போது பார்த்தாலும் நோய் வாய் பட்டுக் கொண்டிருந்தார். என்னால் அவரை கவனிக்க முடியவில்லை. அதனால் அவரை கொலை செய்துவிட்டேன்" என பிரதிமா, கூறியதும் சந்தீப் அதிர்ச்சியில் உறைந்தார்.
உடனே சந்தீப் இந்த விஷயத்தை போலீஸுக்கு தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பிரதிமாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல நாட்களாக திட்டமிட்டு கணவரை கொலை செய்தது தெரியவந்தது.
காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் பாலகிருஷ்ணன் சம்பாதித்த வருமானம் போதவில்லை. இதனால் பிரதிமா, தனது சொந்த ஊரிலேயே ஒரு அழகு நிலையத்தை ஆரம்பித்தார். அங்கு ஏராளமானோர் வந்து மேக்கப் செய்து கொண்டனர். இதை எல்லோரும் பார்த்து தனது கடைக்கு நிறைய கஸ்டமர்கள் வர வேண்டும் என்பதால் அவர் செய்யும் மேக்கப்பை அப்படியே வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் பிரதிமாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திலீப் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நேரில் சந்தித்து நெருங்கி பழகி வந்துள்ளனர். பல முறை தனிமையில் சந்தித்தும் அவர்கள் இருவரும் காதலை வளர்த்துள்ளனர். ஆனால் தனது கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருப்பதால் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
இது குறித்து திலீப்பிடம் சொன்ன போது அவர் ஸ்லோ பாய்சன் வாங்கிக் கொடுத்து அதை தினமும் உணவில் கலந்து கொடுக்கச் சொன்னார். பிரதிமாவும் கணவருக்கு உணவில் ஸ்லோ பாய்சனை கலந்து கொடுத்துள்ளார். இதனால் நாளாக நாளாக அவருடைய உடல் பாதிக்கப்பட்டது. உடுப்பி, மங்களூர், பெங்களூர் ஆகிய நகரங்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்.
அவருக்கு மஞ்சள் காமாலை மட்டுமில்லாமல் உடலில் பல்வேறு வியாதிகள் இருந்ததும் பல பாகங்கள் இயங்காமல் இருந்ததும் தெரியவந்தது. இதனால் அவர் இனி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். ஆனாலும் அவர் எப்போது இறப்பார் என காத்திருந்த பிரதிமாவுக்கு பொறுமை போய்விட்டது.
இதனால் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்ததுமே அன்று இரவு அவரை தலையணையை கொண்டு கொலை செய்துவிட்டதாக பிரதிமா வாக்குமூலம் அளித்தார். இந்த விவகாரத்தில் தனது தங்கை என தெரிந்தும் அதை மறைக்காமல் காட்டி கொடுத்த சந்தீப்பை போலீஸார் பாராட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications