"கணவருடன் சண்டை.." வாய் பேச முடியாத மகனை முதலைகள் இருக்கும் ஆற்றில் வீசிய தாய்.. கர்நாடகாவில் பகீர்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் 26 வயதான பெண் ஒருவர் தனது ஆறு வயது மாற்றுத்திறனாளி மகனை முதலைகள் நிறைந்த ஆற்றில் வீசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைவரது வாழ்க்கையிலும் தாய்- தந்தை முக்கியமானவர்கள். நாம் என்ன செய்தாலும் தாய்- தந்தையும் எப்போதும் நம்முடன் பக்க பலமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கும்.

ஆனால் சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குச் செய்வதைப் பார்த்தால் மிகக் கொடூரமாக இருக்கும். அப்படியொரு மிக மோசமான சம்பவம் கர்நாடக மாநிலம் உத்தர் கன்னட மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.
ஆற்றில் வீசிய கொடூரம்: அங்கு தண்டேலி தாலுகாவில் 26 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில், தனது ஆறு வயது மாற்றுத்திறனாளி மகனை முதலைகள் நிறைந்த ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் 26 வயதான சாவித்திரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "அந்த 6 வயதுக் குழந்தையால் வாய் பேச முடியாது.. பிறந்ததில் இருந்தே ஊமையாக இருந்த அவனது உடல் நிலை குறித்து அந்த தம்பதிக்கு அடிக்கடி சண்டை ஏற்படும். அப்படியொரு சண்டையில் தான் அந்த பெண் இந்த கொடூர காரியத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அவர்களுக்கு 2 வயதில் மற்றொரு மகனும் இருக்கிறார்கள்" என்றார்.
சண்டை: சாவித்திரியின் கணவர் ரவிக்குமார் (27) எப்போதும் தனது மனைவியிடம் சத்தம் போட்டுக் கொண்டே இருப்பாராம். மூத்த மகனின் உடல்நலக்குறைவைக் குறிப்பிட்டு, எதற்காக ஊமைக் குழந்தையைப் பெற்றெடுத்தாய் எனக் கேட்டு சண்டை போடுவாராம். இந்த குழந்தையைத் தூக்கிப் போட்டுவிடு என்றும் கூறி சண்டை போடுவாராம். அப்படியொரு சண்டையில் தான் இந்த கொடூரம் நடந்துள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், "கடந்த சனிக்கிழமை மாலை இதே விஷயத்தில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. கணவர் மிக மோசமாகத் திட்டியதால் விரக்தியடைந்த சாவித்திரி தனது மூத்த மகனை முதலைகள் நிறைந்த காளி நதிக்குச் சென்று சேரும் கழிவு கால்வாயில் வீசியுள்ளார்" என்றார்.
பலி: இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து குழந்தையை மீட்க முயன்றனர். இதற்காக நீருக்கு அடியில் தேடும் பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரர்களும் அழைக்கப்பட்டனர்... ஆனால், இருட்டாக இருந்ததால், குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
விசாரணை: மறுநாள் தேடுதல் வேட்டையைத் தொடங்கிய போது காலையிலேயே போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்குச் சிறுவனின் உடலை போலீசார் மீட்டனர். அவரது உடலில் முதலை கடித்ததைக் காட்டும் வகையில் பல இடங்களில் மோசமான காயங்கள் இருந்துள்ளன. உடலை மீட்ட மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனைக்காக அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரத்தில் போலீசார் அடுத்த கட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
போலீசார் இது குறித்து மேலும் கூறுகையில், "தண்டேலி ரூரல் போலீஸ் ஸ்டேஷனில் ஐபிசி 109 மற்றும் 302 (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். இந்த சம்பவம் தொடர்பாகக் கணவன் மற்றும் மனைவி இருவரையும் கைது செய்துள்ளோம்" என்று அந்த அதிகாரி கூறினார்.












Click it and Unblock the Notifications