இலவசம்னு அறிவிக்க பைத்தியமா?. கர்நாடகா பஸ்ஸில் டிக்கெட் எடுக்க மறுத்த பெண்.. கடும் வாக்குவாதம்
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க மாட்டேன் என்று ஒரு பெண் பிடிவாதம் காட்டிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது ஐந்து கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதாவது, அனைத்து குடியிருப்புகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள நபர் ஒருவருக்கு 10 கிலோ இலவச அரிசி, படித்து வேலையின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000 மற்றும் டிப்ளமோ படித்து வேலையின்றி இருப்பவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை மற்றும் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட 5 தேர்தல் வாக்குறுதிகளை கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் அளித்திருந்தது.

இந்த வாக்குறுதிகள் மற்றும் பிரச்சாரம் காரணமாக காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் மிகப்பெரிய வெற்றியை கர்நாடகாவில்பெற்றது. இதனால் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அண்மையில் ஆட்சி அமைத்தது. சித்தராமையா முதல்வராகவும், துணை முதல்வராக டிகே சிவகுமாரும் பொறுப்பேற்றனர். 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
இந்நிலையில் ஆட்சிக்கு வந்த உடனேயே ஐந்து அறிவிப்புகளையும் நிறைவேற்றுவதற்கு முதல்வர் சித்தராமையா முடிவு செய்துள்ளார். ஆனால் அறிவிக்கப்பட்ட '5 முக்கிய வாக்குறுதிகளை' நிறைவேற்ற தேவைப்படும் 50 ஆயிரம் கோடி செலவீனத்தைச் சமாளிக்க சித்தராமையா என்ன செய்ய போகிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
இதனிடையே 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான ஒப்புதலை கர்நாடகா அமைச்சரவை அண்மையில் வழங்கியது. இதையடுத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட 5 முக்கிய திட்டங்கள் உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக முதலமைச்சரான சித்தராமையா அறிவித்திருந்தார். ஆனால் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.

இந்நிலையில் கர்நாடாகவில் அரசு பேருந்தில் ஏறிய பெண் ஒருவர் டிக்கெட் எடுக்க மறுத்து பிடிவாதமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. டிக்கெட் வாங்க மாட்டேன் என்று பேருந்து நடத்துனரிடம் அந்த பெண் கடுமையாக வாக்குவாதம் செய்தார். "பேருந்தில் பயணிக்க நாங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்றால், அவர்கள் ஏன் அதை இலவசம் என்று அறிவித்தார்கள், அவர்களுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா?" என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து நிலைமையை விளக்கினார்கள்.இந்த வீடியோ தான் கர்நாடகாவில் தற்போது பெரிய அளவில் விவாதப் பொருளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications