கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா.. பைக்கில் செல்லும் போதுகூட லேப்டாப்பில் வேலை பார்த்த இளம்பெண்
பெங்களூர்: பெங்களூரில் பைக்கில் பின் இருக்கையில் அமர்ந்தபடி இளம்பெண் ஒருவர் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டே சென்றது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படும் நகரம் பெங்களூர். இங்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் ஐடி நிறுவனங்களும் குவிந்து கிடக்கின்றன. இதனால் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான ஐடி துறையை சேர்ந்தவர்கள் இங்கு பணியாற்றி வருகிறார்கள். பெங்களூர் நகரம் ஐடி துறைக்கு எப்படி பெயர் போனதோ அதே போல போக்குவரத்து நெரிசலுக்கும் சற்றும் சளைக்காதது.

உலக அளவில் டிராபிக் அதிகம் உள்ள 2-வது நகரமாக பெங்களூர் தான் உள்ளது. இந்தியாவிலேயே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் வரிசையில் முதல் இடத்தில் பெங்களூர் உள்ளது. அதுவும் பீக் நேரங்களில் காலை, மாலை நேரங்களில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வாகனங்கள் அணி வகுத்து நிற்பதை காண முடியும். பெங்களூர் நகரில் காணப்படும் இந்த கடுமையான போக்குவரத்து நெரிசல் பற்றி கலாய்த்து நெட்டிசன்கள் மீம்ஸ்களையும் பகிர்வதுண்டு.
பரவும் வீடியோ: நடந்து போகிறவர்கள் கூட காரில் போகிறவர்களை பயணத்தில் ஜெயித்து விடும் அளவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்த போக்குவரத்து நெரிசலின் போது சில சுவாரசியமான நிகழ்வுகள் இணையத்தில் வைரல் ஹிட் அடிக்கும். காரில் போகும் போதே காய்கறிகளை நறுக்கி வைப்பது... டிராப்பிக்கில் வாகனத்தை நிறுத்திவிட்டு காலை டிஃப்பனை முடித்து விடுவது என வாகன ஓட்டிகள் பல வேலைகளையும் டிராபிக்கில் காத்து நிற்கும் நேரத்தில் முடித்து விடுவார்கள்.
இது குறித்த புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரவும். இந்த நிலையில், இதற்கு ஒரு படி மெலே போய்... பைக்கில் செல்லும் போதே இளம்பெண் ஒருவர் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டு இருக்கும் வீடியோ இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பரவி வைரலாகி வருகின்றன. பைக்கின் பின்புறம் அமர்ந்து இருக்கும் இளம்பெண், லேப்டாப்பில் சீரியசாக தனது வேலையை செய்து கொண்டு இருக்கிறார்.
நெட்டிசன்கள் கருத்து: இதை சக வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் படம் பிடித்து உள்ளார். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சாலையில் செல்லும் நேரத்தை கூட வீணடிக்காமல் அதையும் தனது அலுவலக வேலைகளை முடிக்க அந்த பயன்படுத்திக் கொண்டு இருப்பது குறித்து நெட்டிசன்கள் தங்கள் பாணியில் கமெண்ட் அடித்து வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் இது பற்றி கூறுகையில், "பெங்களூரில் இருக்கிறேன் என்பதை சொல்லாமல்,
நான் பெங்களூரில் இருக்கிறேன் என்பதை காட்டும் படம் தான் இது.. என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், பைக்கில் சிக்னலில் காத்திருக்கும் நேரத்தில் ஆஃபிஸ் வேலையில் பாதியை முடித்து விடலாம் என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதேபோல், ஹெல்மெட் அணியாமல் இருக்கும் அந்த இளம்பெண், இப்படி சாலையில் லேப்டபாப் மீதே கவனம் வைத்து இருப்பது விதி மீறலில் அடங்கும் என்ற பாணியில் சில நெட்டிசன்கள் விமர்ச்சிக்காமலும் இல்லை.












Click it and Unblock the Notifications