ஜிஎஸ்டிஆர்-3பி படிவம் - 20 லட்சத்திற்கும் அதிகமான தொழில்துறையினர் தாக்கல்
ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் இதுவரையில் சுமார் 48 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களின் விற்பனை விபரங்களை பதிவுசெய்துள்ளதாக ஜிஎஸ்டிஎன் தலைவர் நவீன் குமார் தெரிவித்துள்ளார்,
டெல்லி: ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இதுவரைக்கும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஜூலை மாதத்திற்கான வரியினை செலுத்தி உள்ளனர் என்றும் மேலும் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வரி செலுத்த முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டி வரியினை கடந்த 20ம் தேதிக்குள் செலுத்தவேண்டும் என்று கடந்த ஆகஸ்டு முதல் வாரத்தில் சுற்றறிக்கை விடப்பட்டது.
இருந்தாலும் பெரும்பாலான தொழில்துறையினர் ஜிஎஸ்டி வரி விபரங்களை சரிவர புரிந்துகொள்ள இயலாததால், தங்களின் வர்த்தக விவரங்களை ஜிஎஸ்டிஎன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யமுடியாமல் தவித்தனர்.
ஜூலை மாத ஜிஎஸ்டி வரி
கடந்த வாரம் ஜிஎஸ்டிஎன் வரி வாரியத்திலிருந்து மேலும் ஒரு நினைவுறுத்த அறிக்கை விடப்பட்டது. ஆகஸ்டு 20ம் தேதிக்குள் ஜூலை மாதத்திற்கான வரியினை ஜிஎஸ்டிஎன் இணைதளம் மூலம் செலுத்தவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
முடங்கிய இணையதளம்
இதனை அறிந்த அனைத்து வர்த்தகர்களும் தொழில்துறையினரும் ஒரே சமயத்தில் அடித்துப் பிடித்து தங்களின் கொள்முதல், விற்பனை மற்றும் வரி விபரங்களையும் வரியையும் ஜிஎஸ்டிஎன் இணையதளம் மூலம் செலுத்த முயன்றதால் ஜிஎஸ்டிஎன் இணையதளம் முடங்கியது.
மழையால் பாதிப்பு
கூடுதலாக, வடக்கு மற்றம் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட மழை வெள்ளப் பெருக்கால் அந்த மாநில தொழில்துறையினர் தங்களின் கொள்முதல், விற்பனை மற்றும் வரி விபரங்களை ஜஎஸ்டிஎன் இணையதளத்தில் தாக்கல் செய்யமுடியாமல் தவித்தனர்.
நாளை வரை கெடு
இந்த சிரமங்களை எல்லாம் உணர்ந்த ஜிஎஸ்டிஎன் வரி வாரியம் ஜிஎஸ்டிஎன் வரி விபரங்களை தெரிவிக்கும் ஜிஎஸ்டிஆர்-3பி படிவங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை வரும் ஆகஸ்டு 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என்று சுற்றறிக்கை அனுப்பியது. இதனால், பெரும்பாலான வர்த்தகர்களும் தொழில்துறையினரும் தங்களின் கொள்முதல், விற்பனை மற்றும் வரி விபரங்களை விரைவாக தாக்கல் செய்துவருகின்றனர்.
20 லட்சம் பேர்
இதுவரையிலும், சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில்துறையினர் தங்களின் கொள்முதல், விற்பனை மற்றும் செலுத்தவேண்டிய வரி விபரங்கள் அடங்கிய ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தை செலுத்தி உள்ளதாக ஜிஎஸ்டிஎன் தலைவர் நவீன் குமார் தெரிவித்துள்ளார்,
ஜிஎஸ்டிஆர்-3பி தாக்கல் காலக்கெடு
பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய நவீன் குமார் "கெடு தேதி நெருக்கடியால் கடந்த வாரம் ஜிஎஸ்டிஎன் இணையதளம் முடங்கியது. எனவே வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களின் வேண்டுகோளின்படி, ஜிஎஸ்டிஆர்-3பி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் ஆகஸ்டு 25ம் தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டது.
48 லட்சம் பேர் பதிவு
இந்த வாய்ப்பை பயன்படுத்தி இதுவரையில் சுமார் 48 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களின் விற்பனை விபரங்களை பதிவுசெய்துள்ளனர். அதில் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில்துறையினர் வரியையும் செலுத்தி உள்ளனர். மேலும் சுமார் 28 லட்சம் தொழில்துறையினர் தங்களின் விற்பனை விபரங்களை பதிவு செய்துவிட்டு வரி செலுத்த காத்திருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.
42000 கோடி வரி வசூல்
கடந்த ஆகஸ்டு 21ம் தேதி வரையிலும் சுமார் 42,000 கோடி ரூபாய் வரையில் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த வரி வருவாய் ஆனது மத்திய(CGST). மாநில(SGST) மற்றும் ஒருங்கிணைந்து(IGST) மற்றும் கார்கள், புகையிலை போன்றவற்றிக்கு வசூலிக்கப்படும் கூடுதல் வரி வருவாயையும் உள்ளடக்கியதாகும். இந்த வரி வருவாய் ஆனது மேலும் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.