மிஸ்டர் அம்பானி கொஞ்சம் ஓரம்போங்க.. முதல் இடத்தில் ஜம்முன்னு உட்கார்ந்த அதானி!
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு என்பது சாமானிய மக்களின் சொத்துமதிப்பு போல் நிலையான விஷயமாக இருக்காது எத்தனை பேருக்கு தெரியும்? போர் காரணமாகமாகவும், ஏஐ தொழில்நுட்பம் காரணமாகவும் பில்லியனர்களின் சொத்து மதிப்பில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
குறிப்பாக ஆசிய கண்டத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய நிகழ்வு இந்திய மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆசியாவின் பணக்காரர் பட்டியல்
ப்ளூம்பெர்க் பில்லியனேர் இன்டெக்ஸ் அறிக்கையின்படி, முதல் இடத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளி கௌதம் அதானி தற்போது ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக உயர்ந்துள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 92.6 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்டுள்ளது. இதன் மூலம் உலக அளவில் இது 19வது இடத்தைப் பெற்றுள்ளது.
அதே நேரத்தில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 90.8 பில்லியன் டாலராக உள்ளது. இதனால் அவர் ஆசியாவில் 2வது இடத்திலும், உலக அளவில் 20வது இடத்திற்கும் தள்ளப்பட்டு உள்ளார். இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் மிகக் குறைவு என்றாலும், இந்த மாற்றம் சந்தையின் தாக்கத்தை தெளிவாக காட்டியுள்ளது.
கௌதம் அதானியின் சொகத்து மதிப்பு உயர்வு
கௌதம் அதானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு மட்டும் 8.1 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு அவரது குழும நிறுவனங்களின் பங்குச்சந்தை செயல்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. சந்தை சற்று கீழ்நோக்கி சென்ற நாட்களில் கூட அதானி குழும நிறுவனப் பங்குகள் சிறப்பான முன்னேற்றத்தைக் காட்டின.
நேற்றைய ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் கௌதம் அதானி சொத்து மதிப்பு சுமார் 3.56 பில்லியன் டாலர்கள் உயர்ந்தது. இதேநேரத்தில் பங்குச்சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ், நிஃப்டி சரிவை சந்தித்துள்ளது.
முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு குறைந்தது
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு 16.9 பில்லியன் டாலர்கள் அளவுக்கு குறைந்துள்ளது. இதற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளின் கலவையான செயல்பாடு தான் முக்கியக் காரணம். நேற்றைய வர்த்தகம் முடிவில் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 76.7 மில்லியன் டாலர்கள் அளவுக்கு சிறிது உயர்ந்திருந்தாலும், இது அதானியின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு.
ஈரான் போர் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு லாபம் பெரிய அளவில் குறைந்தது. இது பங்குச்சந்தையில் எதிரொலித்த காரணத்தால் பங்கு விலை சரிவு முகேஷ் அம்பானி சொத்து மதிப்பை பாதித்துள்ளது.
பங்குச்சந்தை - உண்மையான விளையாட்டு மைதானம்
பணக்காரர்கள் பட்டியலில் ஏற்படும் மாற்றம் வெறும் வியாபார அளவு சார்ந்தது அல்ல; பங்குச்சந்தையின் செயல்பாடு தான் உண்மையான காரணி. நிறுவனப் பங்குகள் உயர்ந்தால் பங்குதாரர்களின் சொத்து மதிப்பும் உயரும். அவை வீழ்ச்சியடையும்போது அல்லது நிலையாக இருக்கும்போது செல்வம் குறையும் அல்லது மெதுவாகவே வளரும்.
அதானியின் நிறுவனங்கள் வேகமான முன்னேற்றத்தைக் காட்டுவதால் அவரது செல்வம் அதிகரிக்கிறது. அம்பானியின் நிறுவனம் கலவையான போக்கைக் காட்டுவதால் செல்வம் குறைகிறது. இந்த வேறுபாடு தான் தரவரிசையை முழுமையாக மாற்றியுள்ளது. மேலும் உலகளவில் பெரும்பாலான பணக்காரர்களின் சொத்து மதிப்பில் அவர்களது நிறுவனத்தின் சந்தை மதிப்பு தான் அவர்களுடைய சொத்து மதிப்பை நிர்ணயம் செய்கிறது.
உலக பில்லியனர்கள்
2026ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு அதிகப்படியான மாற்றத்தை சந்தித்து வருகிறது. பல பணக்காரர்கள் இந்த ஆண்டு கணிசமான இழப்புகளை எதிர்கொண்டுள்ளனர். உதாரணமாக, பேஷன் உலகின் கிங்மேக்கரான பெர்னார்ட் அர்னால்ட் சுமார் 44 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்து மதிப்பை இழந்துள்ளார். இது உலக பணக்காரர்கள் மத்தியில் ஏற்பட்ட மிகப்பெரிய சொத்து மதிப்பு சரிவாகும்.
பில் கேட்ஸ், வாரன் பஃபெட், லாரி எலிசன் உள்ளிட்டோரும் தங்கள் சொத்து மதிப்பில் சரிவை சந்தித்துள்ளனர்.
டாப் பணக்காரர்
உலக அளவில் எலான் மஸ்க் தொடர்ந்து முதல் இடத்தைத் தக்க வைத்துள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 656 பில்லியன் டாலர்களாக உள்ளது. அவரைத் தொடர்ந்து லாரி பேஜ், ஜெஃப் பெஸோஸ் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற டெக் துறை தலைவர்கள் பணக்காரர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications