அட்சய திருதியை நேரத்தில் தங்க இறக்குமதி நிறுத்தம்.. வங்கிகள் எடுத்த முடிவால் தங்கம் விலை கிடுகிடுவென உயரபோகுது!
இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி தற்காலிகமாக மந்தமடைந்துள்ளது, சொல்லப்போனால் மொத்தமாக நிறுத்தப்பட்டு உள்ளது. பல வங்கிகள் வெளிநாடுகளில் இருந்து புதிய இறக்குமதி ஆர்டர்கள் வைப்பதை நிறுத்தியுள்ளன. இதே நேரத்தில், ஏற்கனவே வந்துள்ள பெரிய அளவிலான தங்கம் மற்றும் வெள்ளி சரக்குகள் சுங்கச் சோதனை நிலையங்களில் சக்கியுள்ளன.
இப்படி வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மொத்தமாக முடங்கியுள்ளது. சந்தைக்கு புதிய தங்கம் வாராத காரணத்தால் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான தட்டுபாடு உருவாகி இதன் விலை உயரும் அபாயம் உருவாகியுள்ளது. இந்தியாவில் தங்கம் இறக்குமதி தடைபட காரணம் என்ன?

ஏன் இறக்குமதி தடைபட்டது?
இந்தியாவில் யாரும் தன்னிச்சையாக தங்கம் அல்லது வெள்ளி இறக்குமதி செய்ய முடியாது. மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) ஒவ்வொரு ஆண்டும், எந்த வங்கிகள் இந்த உலோகங்களை இறக்குமதி செய்யலாம் என்று பட்டியல் வெளியிடும்.
2025 ஏப்ரலில் வெளியிடப்பட்ட உத்தரவு, 2026 மார்ச் 31 வரை மட்டுமே செல்லுபடியாக இருந்தது. புதிய உத்தரவு ஏப்ரல் தொடக்கத்தில் வருமென எதிர்பார்க்கப்பட்டாலும், இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால், வங்கிகள் சட்டபூர்வமாக புதிய இறக்குமதி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
சுங்கத்தில் சிக்கியுள்ள சரக்குகள்
தற்போது, 5 டன்னுக்கு மேற்பட்ட தங்கமும், சுமார் 8 டன் வெள்ளியும் சுங்கச் சோதனை நிலையங்களில் அனுமதி இன்றி காத்திருக்கின்றன. ஏற்கனவே வந்த சரக்குகளுக்கே அனுமதி கிடைக்காத நிலையில், புதிய ஆர்டர்கள் வைப்பதில் வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன.
இந்த 13 டன் உலோகம் ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டது, இது வெளியேற வராத நிலையில் நகை கடைக்காரர்கள் புதிய தங்கத்தை ஆர்டர் செய்ய முடியாத நிலையில் மாட்டிக்கொண்டு உள்ளது. இதைவிட முக்கியமாக அட்சய திருதியை பண்டிகை அடுத்த சில நாட்களில் வர உள்ளது.
இந்திய சந்தைக்கு ஏற்படும் தாக்கம்
இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் நாடாகவும், மிகப்பெரிய வெள்ளி இறக்குமதி நாடாகவும் உள்ளது. உள்நாட்டு தேவையை நிறைவேற்ற இந்தியா பெரும்பாலும் இறக்குமதியை மட்டுமே சார்ந்துள்ளது.
இந்த நிலை நீடித்தால், சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி பற்றாக்குறை உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்படலாம். நகை வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களின் வர்த்தகம் பாதிப்பு சந்திக்கலாம்.
உலக சந்தை மற்றும் ரூபாய் மதிப்பில் தாக்கம்
இந்த நிலை இந்தியாவை மட்டும் பாதிக்கவில்லை. இந்தியா இறக்குமதி குறைத்தால், உலகளவில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான தேவை குறையும். இதனால் சர்வதேச விலைகள் குறையக்கூடும்.
அதே நேரத்தில், இறக்குமதி குறைவதால் வெளிநாட்டு நாணய செலவுகள் குறையும். இது இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும், ரூபாய் மதிப்பை ஆதரிக்கவும் உதவலாம்.
அரசின் மறைமுக நோக்கம் என்ன?
இந்த தாமதம், ரூபாய் மதிப்பை பாதுகாக்கும் ஒரு பரந்த பொருளாதார திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என வணிக வட்டாரங்கள் கருதுகின்றன. ஏற்கனவே, டாலர் செலவுகளை கட்டுப்படுத்த சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. தங்க இறக்குமதி அதிக டாலர் செலவினத்தை உருவாக்குவதால், இதை கட்டுப்படுத்துவது நாணய நிலைத்தன்மைக்கு உதவும்.
சமீபத்தில் தங்க இறக்குமதியில் முறைகேடுகள் நடைபெறுவதாக கண்டறியப்பட்ட நிலையில், பல முக்கிய பிரிவுகளில் இறக்குமதியை கட்டுப்படுத்தியது. இதனால் மொத்த ஜுவல்லரி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
தங்கத்திற்கான டிமாண்ட் குறைந்தது
இந்த சிக்கல் உருவாகும் முன்பே, இந்தியாவில் தங்க தேவை குறைந்திருந்தது. 2025 ஆம் ஆண்டில், மொத்த தங்க தேவை 710.9 டன்னாக குறைந்தது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும்.
இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு - புதிய DGFT உத்தரவு வெளியீடு. அது வெளிவந்தவுடன் சுங்க துறையிடம் சிக்கியுள்ள சரக்குகள் அனுமதி பெறும், இறக்குமதி மீண்டும் தொடங்கும், சந்தை சீராகும்.
இது தங்கம் அல்லது வெள்ளி பற்றாக்குறை பிரச்சினை அல்ல, நிர்வாக அனுமதி தாமதம் காரணமாக உருவான தற்காலிக தடையாகும். ஆனால் இந்த தாமதம் நீண்டால், அதன் தாக்கம் இந்திய சந்தையை மட்டுமல்ல, உலக சந்தையையும் பாதிக்கக்கூடியதாக மாறும்.















Click it and Unblock the Notifications