டிரம்ப்-ஐ நம்ப முடியாது.. இந்த சனி - ஞாயிறு தான் ரொம்ப முக்கியம்.. உஷாரான முதலீட்டாளர்கள்..!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்படும் பதற்றம் குறையும் போது, எரிபொருள் விலைகள் குறைவதும், முதலீட்டாளர்கள் நம்பிக்கை பெறுவதும் இயல்பாகிறது. ஆனால் டிரம்ப் சொல்வதை உறுதியாக நம்ப முடியாது என்ற காரணத்தால் முதலீட்டாளர்கள் உலகம் முழுவதும் மிகவும் எச்சரிக்கையான போக்கை தான் இன்றைய வர்த்தகத்தில் கடைப்பிடித்துள்ளனர்.
இதனால் தங்கம் விலையில் பெரிய டிவிஸ்ட் நடந்துள்ளது. பங்குச்சந்தையிலும் எதிர்பார்த்த ரியாக்ஷன் இல்லை.

இஸ்ரேல் மற்றும் லெபனான் போர்
அமெரிக்கா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்தம் ஏப்ரல் 17ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் நடைபெற்ற நேரடி பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த தற்காலிக ஒப்பந்தம், ஈரான் போர் தொடர்பான சூழலை சற்று தணிக்கும், அதேபோல் இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி திரும்புவதற்கான முதல் படியாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா-ஈரான் போர்
அதிபர் டிரம்ப் வியாழக்கிழமை அறிவித்தபடி, ஈரானுடன் இரண்டாவது சுற்று நேரடி பேச்சுவார்த்தை இந்த வார இறுதியில் நடைபெற வாய்ப்பு உள்ளது. கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. தற்போது மீண்டும் உயர்மட்ட முயற்சிகள் மூலம் புதிய பேச்சு தேதி உறுதி செய்யப்படும் நிலையில் உள்ளது.
ஏப்ரல் 22-ம் தேதி முடிவடையும் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு முன்பாக இந்த நிரந்தர அமைதி ஒப்பந்தம் கிடைக்கும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இரண்டு வார தற்காலிக ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.
கச்சா எண்ணெய் விலை
போர் நிறுத்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ஆசிய சந்தைகள் திறக்கும் போதே கச்சா எண்ணெய் விலைகள் குறைந்தன. உலக அளவில் முக்கியமான பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சியடைந்து பேரல் ஒன்றுக்கு 98.05 டாலராக இருந்தது. அமெரிக்க கச்சா எண்ணெய் விலையும் 94 டாலருக்கு கீழ் இறங்கியது.
மார்ச் மாதத்தில் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக 50 சதவீதம் உயர்ந்திருந்த எண்ணெய் விலை, தற்போது 100 டாலருக்கு கீழ் திரும்பியுள்ளது, அதிலும் முக்கியமாக 95 டாலருக்கு கீழ் குறைந்துள்ளது. இந்த வாரம் முழுவதும் 90 டாலர் அளவில் நிலையாக இருந்தது. டிரம்ப்பின் ஈரான் பேச்சு அறிவிப்பும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தங்க விலையில் டிவிஸ்ட்
தங்க விலை பெரும்பாலும் நிலையாகவே இருந்தாலும், போர் நிறுத்த பேச்சுவார்த்தை எதிர்பார்ப்பு காரணமாக பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வு குறித்த கவலைகள் குறைந்துள்ளன. இதனால் தங்கம் விலையில் பெரிய அளவிலான சரிவுகள் ஏற்படாமல் சிறிய அளவிலான உயர்வை மட்டுமே பதிவு செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் ஸ்பாட் விலை 0.12 சதவீதம் மட்டுமே உயர்ந்து 4,796.67 டாலரில் தேங்கியுள்ளது. ஆனால் வாராந்திர அளவில் 0.9 சதவீதம் உயர்வு பதிவாகியுள்ளது. அமெரிக்க சந்தையில் ஜூன் தங்க ஃபியூச்சர்ஸ் 4,809.30 டாலரில் நிலையாக இருந்தது. வெள்ளி விலை சற்று குறைந்து 78.26 டாலராக இருந்தாலும், அது நான்காவது வாரமாக லாபத்தை பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் எம்சிஎக்ஸ் தங்க விலை ஜூன் ஒப்பந்தம் 0.18 சதவீதம் சரிந்து 10 கிராம் 1,52,871 ரூபாயாகவும், வெள்ளி மே ஒப்பந்தம் 0.50 சதவீதம் உயர்ந்து கிலோ 2,49,859 ரூபாயாகவும் வர்த்தகமானது.
ரீடைல் சந்தையில் 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை 164 ரூபாய் சரிந்து 15,502 ரூபாயாகவும், 22 கேரட் தங்கம் விலை 150 ரூபாய் குறைந்து 14,210 ரூபாயாகவும் உள்ளது.
இந்திய பங்குச் சந்தை
இந்திய சந்தைகளும் போர் நிறுத்தம் காரணமாக அதிரடியாக உயராமல் அமைதியான வர்த்தகத்தை எதிர்கொண்டு உள்ளது. சென்செக்ஸ் 304.06 புள்ளிகள் அதிகரித்து 78,291.74-ஐ எட்டியது (0.39 சதவீத உயர்வு). நிஃப்டி 50 81.60 புள்ளிகள் உயர்ந்து 24,277.35-ஐ தொட்டது (0.34 சதவீதம்). நடுத்தர மற்றும் சிறு நிறுவன பங்குகள் உயர்வுடன் உள்ளது முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது. நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் ஸ்மால்கேப் 100 இரண்டும் 0.5 சதவீதத்துக்கு மேல் உயர்வு கண்டன.
ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 25 பைசா வலுவடைந்து 92.95-இல் தொடங்கியது.
அமெரிக்க பங்குச் சந்தை
வியாழக்கிழமை அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன. நாஸ்டாக் மற்றும் எஸ்&பி 500 இன்ட்ராடே புதிய உச்சங்களைப் பதிவு செய்தன. டவ் ஜோன்ஸ் 115 புள்ளிகள் உயர்ந்து 48,578.72-ஐ எட்டியது (0.24 சதவீதம்). எஸ்&பி 500 18.33 புள்ளிகள் அதிகரித்து 7,041.28-ஆகவும், நாஸ்டாக் 86.69 புள்ளிகள் உயர்ந்து 24,102.70-ஆகவும் முடிவடைந்தன. ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் எனும் எதிர்பார்ப்பு இந்த உயர்வுக்கு முக்கிய காரணம்.
விப்ரோ பங்கு வீழ்ச்சி
நேற்று காலாண்டு முடிவுகளை வெளியிட்ட விப்ரோ பங்குகள் இன்று 3 சதவீதத்துக்கு மேல் சரிவடைந்துள்ளது. விப்ரோ காலாண்டு முடிவுகளின்படி, ஐடி சேவைகள் வருமானம் 2.73 சதவீதம் உயர்ந்து 24,017 கோடி ரூபாயாக இருந்தாலும், லாப வரம்பு சற்று குறைந்தது. இந்த முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தின.
ஒட்டுமொத்தமாக, இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மற்றும் அமெரிக்கா-ஈரான் அமைதி பேச்சுவார்த்தை எதிர்பார்ப்பு உலகப் பொருளாதாரத்துக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் முதலீட்டு சந்தையில் இதன் தாக்கம் முழுமையாக எதிரொலிக்கவில்லை.












Click it and Unblock the Notifications