ஜிஎஸ்டியால் மூடப்பட்ட சிறு,குறு தொழில் நிறுவனங்கள் - வேலை இழந்த 5 லட்சம் பேர்
கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரத்து 329 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் வேலை இழந்துள்ளனர்.
கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரத்து 329 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் சிறு, குறு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூலம் ஜவுளி, மின் பொருட்கள், தோல் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட பொருட்களும், பெரிய தொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு தேவையான உதிரி பாகங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறு,குறு தொழில் நிறுவனங்கள் 40 சதவீதம் ஏற்றுமதி செய்கின்றன.
கடந்த 2017 ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. இதில், சிறு, குறு தொழில் நிறுவனங்களில் பெரும்பாலான உற்பத்தி பொருட்களுக்கு 18 சதவீதம் வரை வரி விதித்தது. தொழில் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன.
தொழில் நிறுவனங்கள்
கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரத்து 329 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் சட்டசபையில் தமிழக அரசு தாக்கல் செய்ய கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2007-2008-ம் ஆண்டில் 27,209 என்ற அளவில் இருந்தது. அதன் மூலம் ரூ.2,547.14 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, ரூ.8,739.95 கோடி அளவுக்கு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 2 லட்சத்து 42 ஆயிரத்து 855 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தது.
அதிகரித்த முதலீடு
உத்யோக் ஆதார் பதிவறிக்கை செயலாக்கத்திற்கு வந்த பிறகு, 2016-2017-ம் ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 310 அளவுக்கு உயர்ந்தது. முதலீடும் ரூ.36,221.78 கோடி என்ற அளவுக்கு அதிகரித்தது. இதன் மூலம் வேலைவாய்ப்பு 18 லட்சத்து 97 ஆயிரத்து 619 பேருக்கு கிடைத்தது.
50000 தொழில் நிறுவனங்கள் மூடல்
2017-2018-ம் ஆண்டை கணக்கில் எடுத்துக்கொண்டால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 981 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. முதலீட்டின் அளவும் ரூ.25,373.12 கோடி என்ற அளவுக்கு சரிந்துள்ளது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கையும் 13 லட்சத்து 78 ஆயிரத்து 544 ஆக குறைந்தது என அரசின் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி அறிமுகம்
தமிழகத்தில் பல சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் சத்தமில்லாமல் மூடப்பட்டு வருவதற்குக் காரணம் பணமதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டியும்தான் என்பது பலரது ஆதங்கம். 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு உயர்மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என மோடி அறிவித்தது பல தொழில் நிறுவனங்கள் பலத்த அடிவாங்க காரணமாக அமைந்தது. அடுத்த ஆண்டே ஜிஎஸ்டியும் சிறு குறு தொழில் நிறுவனங்களை பதம் பார்த்து விட்டது என்கின்றனர் கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் தொழில் முனைவோர் சங்கத்தினர்.
சரிந்த முதலீடு
அரசின் கொள்கை விளக்க குறிப்பின் படி மத்திய அரசு நடவடிக்கையால் 11,000 கோடி முதலீடு சரிந்துள்ளது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் ஓராண்டில் மட்டும் தமிழகத்தில் 49,329 எண்ணிக்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.