500 ரூபாய் நோட்டுகளை மாற்ற ஜூன் 30 வரை அவகாசம் நீடிப்பு-ரிசர்வ் பேங்க்
டெல்லி: ரிசர்வ் பேங்க் அறிவிப்பின்படி 2005 ஆம் ஆண்டில் வெளியான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் அது எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இடம் பெறவில்லை. இந்த நோட்டுக்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
அதன்படி 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்னர் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுமாறும் அதன்பிறகு 2005 ஆம் ஆண்டு அச்சிடப்படாத 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதன்படி ரூபாய் நோட்டுக்களை மாற்ற இன்னும் 1 வார காலமே இருந்தது.
இந்நிலையில் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஆனால், இனி 10 நோட்டுகளுக்கு அதிகமாக கொடுத்து மாற்றும் போது முகவரி சான்று மற்றும் அடையாள சான்று கொடுத்தால் மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும்.
கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணத்தை தடுக்கும் விதமாக ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கணக்கில் வராத கருப்பு பணத்தையும் இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.