உயர் ரக வாழைப்பழ தார் விலை கடும் சரிவு - விவசாயிகள் கவலை
நெல்லை: நெல்லையில் உயர்ரக ஏத்தன் ரக வாழைத்தாரின் விலை கிலோ ரூ.18 ஆக விற்கப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் விகேபுரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், காருகுறிஞ்சி, குனியூர், சேரன்மகாதேவி, முக்கூடல், சங்கரன்திரடு, பத்தமடை உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன.
சேரன்மகாதேவி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன. 12 மாத பயிரான இவை குலை தள்ளி காய்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக சுமார் 10 மாதங்கள் வரை கஷ்டப்பட வேண்டியது இருக்கும். அதன்பிறகு அறுவடை செய்து கை கொடுக்கும் என்று எதிர்பார்த்திருந்த விவசாயிகள் தற்போது கவலையில் மூழ்கியுள்ளனர்.
தை முதல் வாரம் ஏத்தன் ரக வாழைக்காய் ரூ.38க்கு விலை போனது. தற்போது சரி பாதி விலை வீழ்ச்சியடைந்து ரூ.18க்கு விற்கப்படுவதால் விவசாயிகளுக்கு பலத்த அடி விழுந்துள்ளது.
ஒரு தார் ரூ.250 முதல் ரூ.300 வரை விலை போன நிலை மாறி ரூ.110 முதல் ரூ.140 வரையே விற்பனையாகிறது. இதற்கு வியாபாரிகள், புரோக்கர்கள் கூட்டணியே காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
நெல்லையில் கொள்முதல் செய்யப்படும் வாழைதார்கள் கேரளாவில் கொள்ளை லாபத்தில் விற்கப்படுவதாகவும், இதன் மூலம் வியாபாரிகளும், புரோக்கர்களும் அதிக பணம் பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.