ரெடியாகவும்.. அடுத்த ஒன்றரை மாதங்களில் இந்திய பொருளாதாரத்தில் பெரும் புயல் வீசப்போகிறது!
மும்பை: மும்பை பங்குச் சந்தையில் 4,600 புள்ளிகள் சரிவடைந்ததையே, ஒரு பேரழிவு போல நாம் நினைக்கிறோம். ஆனால், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இனிதான் மிக மோசமான காலம் காத்திருக்கிறது.
இன்னும் ஆறு வாரங்களுக்குள் தலால் ஸ்ட்ரீட்டில், ஒரு பெரும் புயல் வீசப் போகிறது என்று கணிக்கிறார்கள், பங்குச் சந்தை விற்பன்னர்கள்.
இந்திய பங்குச்சந்தைகள், 'தொட்டால் சிணுங்கி' போல மிகவும் மென்மையாக உள்ளன. கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு அல்லது சில கார்ப்பரேட் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்கள் கூட பங்குச்சந்தையை சரிவடைய வைத்துவிடுகின்றன.
3 காரணங்கள்
இதன்படி பார்த்தால் இனி வரும் சில நாட்களில் பங்குச்சந்தையின் பொது மனநிலைக்கு எதிராக சில நிகழ்வுகள் நாட்டில் நடைபெற உள்ளன. இது கண்டிப்பாக பங்கு சந்தையை பாதிக்கக் கூடும் என்கிறார்கள். ஈரான் மீதான அமெரிக்க பொருளாதார தடை, அமெரிக்காவின் இடைக்கால தேர்தல்கள் இந்தியாவில், இந்திய மாநிலத் தேர்தல் முடிவுகள் ஆகியவை, பங்குச் சந்தையை பாதிக்கப்போகும், மூன்று முக்கியமான காரணிகளாக இருக்கின்றன.
தேசிய பங்குச் சந்தை
"தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி, 9,900 என்ற அளவுக்கு செல்லக்கூடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்கிறார் ஐடிபிஐ கேப்பிட்டல் ரிசர்ச் தலைவர் ஏ.கே.பிரபாகர். இதன்படி பார்த்தால் நிப்டி இன்னும் 400 புள்ளிகள் இறங்கக் கூடும் என்று தெரிகிறது. சென்செக்ஸ் மேலும், 1,200 புள்ளிகள் இறங்கக் கூடும் என்று தெரிகிறது. எனவே அடுத்த ஒன்று முதல் ஒன்றரை மாதங்கள் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கஷ்டமான காலமாக இருக்கக்கூடும் என்கிறார் அவர்.
ஈராக் மீது பொருளாதார தடை
நவம்பர் 4ம் தேதி தான் ஈராக் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை அமலுக்கு வர உள்ளது. இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதியில் 10 முதல் 12 சதவீதத்திற்கு ஈராக்கை நம்பி இருக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே பொருளாதார தடையின் தாக்கத்தால், இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடையக்கூடும்.
சவுதி, ரஷ்யா
கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கியமான பங்கு வகிக்கும் சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் அதன் உற்பத்தியை அதிகரிக்க, அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை புறக்கணித்துவிட்டன. ஈராக் மீதான பொருளாதார தடையும், இவ்விரு நாடுகளின் உற்பத்தி பெருக்க மறுப்பும் காரணமாக கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்க கூடும். இன்றிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அதாவது நவம்பர் இரண்டாவது வாரங்களில், ஈரான் மீதான பொருளாதார தடையின் தாக்கம், இருக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும் என்கிறார் Macquarie கேப்பிட்டலின், இந்திரஜித் சிங்.
பங்கு மதிப்பு
இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் பங்கு பங்கு மதிப்பு என்பது 17 ஆயிரத்து 664 கோடியாக இந்த ஆண்டில் உயர்ந்துள்ளது. 2008ஆம் ஆண்டு 52 ஆயிரத்து 987 கோடி பங்கு மதிப்பு வெளிநாடுகளுக்கு சென்றது. அதற்குபிறகு சென்றுள்ள அதிகப்படியான மதிப்பு இதுவாகும்.
தேர்தல் முடிவுகள்
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோராம், சட்டீஸ்கர், தெலுங்கானா மாநில தேர்தல் முடிவுகள் டிசம்பர் 2வது வாரம் வெளியாக உள்ளன. அவற்றின் முடிவுகள், அடுத்த லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கான முன்னோட்டம் என்பதால், பங்குச் சந்தையில் அதன் தாக்கம் இருக்கும் என்றும், அமெரிக்க இடைக்கால தேர்தல்கள் நவம்பரில் நடக்க உள்ள நிலையில், அதனால் வர்த்தகத்தில் பாதிப்பு இருக்கும் என்றும், கணிக்கிறார்கள், பங்குச் சந்தை வல்லுநர்கள்.
எரிபொருள் விலை
எரிபொருள் மீதான விலையை மத்திய அரசு சமீபத்தில் குறைத்துள்ளது பங்குச்சந்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக, தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இதுபோன்ற கவர்ச்சிகர திட்டங்களை அரசு அறிவித்தால் என்ன ஆகும் என்ற பயம் முதலீட்டாளர்களிடையே ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.