இரண்டே நாள் தான் டைம்.. டிரம்பால் இந்தியாவுக்கு வரும் சிக்கல்.. அப்போ தங்கம்? ஆனந்த் சீனிவாசன் பகீர்
சென்னை: அமெரிக்க அதிபரான டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்துள்ள நிலையில், இது உலகளவில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்.. இது சர்வதேச வர்த்தகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவுக்கு முன்னுரிமை தரப்போகிறேன் என சொல்லிக்கொண்டு அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது வரியை வெடி போல வீசி வருகிறார். இது சர்வதேச வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கிறது. இதற்கிடையே நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 2ம் தேதி முதல் உலக நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்துள்ளார்.

டிரம்பின் ரெசிப்ரோக்கல் வரி
அதாவது ஒரு நாடு அமெரிக்கா மீது எவ்வளவு வரி விதிக்கிறதோ.. அதே அளவுக்கு அமெரிக்காவும் அந்த நாடு மீது வரி விதிக்கும். இதுதான் ரெசிப்ரோக்கல் வரி. இதற்கிடையே டிரம்பின் நடவடிக்கைகள் சர்வதேச வர்த்தகத்தை எப்படி பாதிக்கும் என்பதை விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், இதனால் இந்தியாவுக்கு என்ன சிக்கல் என்பது குறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
தங்கம்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறுகையில், "டிரம்ப் பேச பேச இங்கே தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது. அமெரிக்காவில் ஜூலை 4ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், டிரம்ப் ஆதரவாளர்கள் புதிய லிபரேஷன் தினம் (கிட்டதட்ட சுதந்திர தினத்தை போல) ஏப்ரல் 2ம் தேதி தான் என நம்புகிறார்கள். இதை அவர்கள் இரண்டாவது லிபரேஷன் வரி திட்டம் என்கிறார்கள்.
மாறி மாறி பேசும் டிரம்ப்
ஏப்ரல் 2ம் தேதி அவர் உலக நாடுகள் மீது வரியை விதிக்க உள்ளார். முதலில் சில நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என்பது போல சொன்னார்கள். ஆனால், இப்போது இருப்பதை வைத்து பார்த்தால் யாருக்கும் விலக்கு அளிக்க மாட்டார் என்றே தெரிகிறது. இப்படி தான் அவர் மாற்றி மாற்றி பேசி வருகிறார். காலையில் ஒன்று சொல்கிறார். மதியம் ஒன்று சொல்கிறார். மாலையில் வேறு ஒன்றை சொல்கிறார். சரக்கு கப்பல் கிளம்பும்போது ஒன்று சொல்வார். கிளம்பிய பிறகு மற்றொன்றை சொல்வார். ஆனால், நமக்கு வேறு வழியில்லை. இதோடு தான் இருக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் இந்தியா மொத்தமாக சரண்டர் ஆகிவிட்டது போலவே இருப்பதாக அமெரிக்க இதழான ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. அதிக வரி விதிக்கும் இந்தியா தனது வரியை குறைத்துக் கொள்கிறது என்று ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
இந்தியாவுக்கு சிக்கல்
இப்போது அமெரிக்காவின் சராசரி வரி 2%ஆகவும் இந்தியாவின் சராசரி வரி 12%ஆகவும் இருப்பதாக உலக வர்த்தக அமைப்பு கூறுகிறது. அமெரிக்காவுக்கான வரியை 50% வரை குறைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. அப்போது அவர்கள் வரி 2%ஆகவும் இந்தியாவின் வரி 6%ஆகவும் இருக்கும். அமெரிக்காவின் ரெசிப்ரோக்கல் வரியில் இருந்து தப்பிக்கவே இதுபோல செய்கிறார்களாம். அமெரிக்கா ரெசிப்ரோக்கல் வரியை போட்டால் அது இந்தியாவின் 90% ஏற்றுமதியை பாதிக்கும் என்பதாலே இப்படி செய்கிறார்கள்.
ஏற்கனவே டிரம்பின் ஆதரவாளரான எலான் மஸ்கிற்கு சாதகமாக மின்சார பேட்டரிகளின் தயாரிக்க பயன்படும் 35 பொருட்களுக்கு இறக்குமதி வரியை பூஜ்ஜியமாக ஆக்கியுள்ளனர். மேலும் செல்போன் தயாரிப்பிலும் 28 பொருட்களுக்கு இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளனர். இதனால் இந்தியாவுக்கு சாதகம் என சொல்கிறார்கள். அதேபோல டிரம்ப் காப்பர் இறக்குமதிக்கு 25% வரி போடுவேன் என்கிறார். இதுவும் சர்வதேச வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும். இது இந்தியாவிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்" என்றார்.












Click it and Unblock the Notifications