ஈரான் போர்: பெருசா ஏதோ நடக்கபோகுது.. UAE செய்த விசித்திரமான காரியம்.. எச்சரிக்கும் கீதா கோபிநாத்!
துபாய்: ஹார்வர்ட் பல்கலைக்கழக பொருளாதாரப் பேராசிரியரும், சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் துணை நிர்வாக இயக்குநருமான கீதா கோபிநாத் தனது டிவிட்டர் பதிவில் ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அமெரிக்காவுடன் கரன்சி ஸ்வாப் லைன் ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்து வருது, ஈரான் மோதலின் உண்மையான பாதிப்புகள் சந்தைகள் எதிர்பார்ப்பதை விட மிகப் பெரியதாக இருக்கும் என்பதை காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் முதலீட்டு சந்தையில் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கரன்சி ஸ்வாப் லைன் என்றால் என்ன?
கரன்சி ஸ்வாப் லைன் என்பது இரு நாடுகளுக்கு இடையேயான அவசரகால நிதி உதவி ஒப்பந்தம். இதன் மூலம் ஒரு நாடு (இங்கு ஐக்கிய அரபு அமீரகம்) தேவைப்படும் சமயத்தில் அமெரிக்க டாலர்களை விரைவாகப் பெற முடியும். உலக வர்த்தகம், குறிப்பாக எண்ணெய் வர்த்தகம் டாலரை அடிப்படையாகக் கொண்டது.
பொதுவாக பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது டாலர் பற்றாக்குறை, நாணய மதிப்பு வீழ்ச்சி அல்லது பணப்புழக்கப் பிரச்சனை ஏற்படாமல் அதை தடுக்க இத்தகைய ஒப்பந்தம் உதவுகிறது. 2008ல் உலகளாவிய நிதி நெருக்கடி மற்றும் 2020 கொரோனா காலத்தில் பெரிய சிக்கல்கள் உருவானபோது மட்டுமே இத்தகைய கரன்சி ஸ்வாப் லைன் பயன்படுத்தப்படும். தற்போது ஐக்கிய அரபு அமீரகம் இத்தகைய ஒப்பந்தத்தை கையில் எடுக்க என்ன காரணம்?
ஐக்கிய அரபு அமீரகம் வார்னிங் கொடுக்கிறதா?
ஐக்கிய அரபு அமீரகம் உலகின் மிகப் பணக்கார நாடுகளில் ஒன்று. அதன் வெளிநாட்டு நிதி இருப்பு சுமார் 270 பில்லியன் டாலர் மற்றும் அரசு நிதியகங்களில் சுமார் 1.5 டிரில்லியன் டாலருக்கு மேல் உள்ளன. இத்தகைய பணக்கார நாடு அமெரிக்காவிடம் அவசர டாலர் உதவி கோருவது சாதாரணமான செயல் அல்ல.
இது மோசமான பொருளாதார சூழ்நிலையை எதிர்பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதாகக் கருதப்படுகிறது. ஈரான் உடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணைப்பு மூலம் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இத்தகைய நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் கரன்சி ஸ்வாப் லைன் ஒப்பந்தம் செய்து டாலரை பெறுகிறது என்றால் ஈரான் போர் மோசமாக போகிறதா அல்லது போர் நீண்ட காலம் தொடருமா என்ற கேள்வியும் எழுகிறது.
மாய நிலையில் சந்தைகள்
கீதா கோபிநாத் கூறுவதன் பொருள், தற்போதைய பங்குச் சந்தை மற்றும் எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள் ஈரான் மோதலின் உண்மையான பாதிப்பை முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்பது தான். சந்தைகள் இப்போது ஒப்பீட்டளவில் அமைதியாகத் தெரிகின்றன.
ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடு பின்னணியில் அவசர நிதி ஏற்பாடுகளை செய்வது, டாலர் பற்றாக்குறை, மூலதன வெளியேற்றம் மற்றும் பெரிய பொருளாதார அதிர்ச்சி ஏற்படும் அபாயத்தை சுட்டிக்காட்டுகிறது. இது உலகளாவிய பொருளாதாரத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த கரன்சி ஸ்வாப் லைன் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் தெரிகிறது.
ஈரான் பதற்றம் தொடர்பான இந்த எச்சரிக்கை உலக சந்தைகளுக்கு முக்கியமான செய்தியாக மாறியுள்ளது. சாதாரண மக்களுக்கு இது எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் உலகளாவிய வர்த்தகப் பாதிப்பு ஆகியவற்றின் வடிவில் தெரியவரும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அடுத்த சில நாட்களில் இந்த விவகாரம் தொடர்பான மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
கீதா கோபிநாத் சொல்வது போல் நடந்தால் பங்குச்சந்தை அடுத்த சில நாட்களிலோ அல்லது ஓரிரு வாரத்தில் பெரும் சரிவை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சிக்னல் ஹார்முஸ் நீரிணையில் இருந்து தான் வரும்.















Click it and Unblock the Notifications