டிரம்ப் இருக்க பயமேன்.. தங்கம் விலை இனிமேல் "இப்படி" தான்.. அடித்து சொன்ன ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் என மாறி மாறி இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை வரும் காலங்களில் என்னவாக போகிறது என்பதில் தெளிவில்லாமல் பொதுமக்கள் குழப்பத்தில் இருந்தனர். இதற்கிடையே தங்கம் விலை வரும் காலங்களில் எப்படி இருக்கும்.. அதற்கு என்ன காரணம் என்பதைப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.
இந்தியாவில் கடந்த சில காலமாகவே ஏற்ற இறக்கம் என மாறி மாறியே இருந்து வருகிறது. கடந்த மே 15ம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு சவரன் குறைந்தபட்சமாக ரூ.68,800ஐ எட்டியது. அதற்கு மறுநாள் ரூ.880 உயர்ந்து ரூ.69,760ஐ தொட்ட தங்கம் விலை பிறகு 3 நாட்கள் மாற்றம் இல்லாமல் தொடர்ந்தது.

தங்கம் விலை
தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்ந்த தங்கம் விலை, அதன் பிறகு நேற்று முன்தினம் குறைந்தது. திடீரென நேற்று உயர்ந்து சவரன் ரூ.71,440க்கு விற்கப்பட்டது. இன்றைய தினமும் தங்கம் விலை மேலும் உயர்ந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.8975க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுபோல தங்கம் விலை உயர்வது குறைவது என மாறி மாறி இருந்து வருவதால் மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். தங்கத்தை இப்போது வாங்கலாமா.. இல்லை குறையுமா.. அப்படிக் குறைந்தால் எவ்வளவு குறையும்.. இல்லை தங்கம் விலை உயருமா என மக்களிடையே பல கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கிடையே இதற்கான பதிலைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் அளித்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "இரண்டு நாட்களுக்கு முன்பு மூடிஸ் (Moody's) நிதி நிறுவனம் அமெரிக்காவுக்கான கிரெடிட் ரேட்டிங்கை கொடுத்திருந்தனர். அமெரிக்காவுக்கு அதிகபட்ச ரேட்டிங் கொடுத்திருந்த கடைசி நிறுவனம் மூடிஸ் தான். மற்ற அனைவரும் இதற்கு முன்பே குறைந்திருந்தனர். மூடிஸ் எப்போது குறைப்பார்கள் என்றே பலரும் எதிர்பார்த்த நிலையில், இப்போது அவர்களும் குறைத்துவிட்டனர்.
அனைவரும் இதுபோல கிரெடிட் ரேட்டிங்கை குறைத்ததால் அமெரிக்காவின் 30+ ஆண்டுகள் கடன் பத்திர வட்டி விகிதம் 5 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது. அதாவது அமெரிக்க அரசு தனது நீண்ட கால கடனுக்கு 5%க்கு மேல் வட்டியைக் கொடுத்தாக வேண்டி இருக்கிறது. டிரம்பின் ஒரு மசோதா இப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற இருக்கிறது. அதில் செலவுகளைக் கொஞ்சம் குறைத்துள்ள அதேநேரம் ஏகப்பட்ட வரி விலக்குகளையும் கொடுத்துள்ளனர். அதாவது பெருந்தொற்று இல்லாத அமைதியான சூழலில் கூட அமெரிக்காவில் தனது பற்றாக்குறையைக் குறைக்க முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது.
அமெரிக்காவின் பற்றாக்குறை
பைடன் இருந்த போதும் அது முடியவில்லை.. டிரம்ப்பாலும் முடியவில்லை. நாங்கள் பொறுப்பில்லாமல் தான் இருப்போம் என்றே அமெரிக்கா சொல்வதாக உலகம் பார்க்கிறது. டிரம்பின் கோமாளித்தனமான நடவடிக்கைகள் டாலர் மீதான நம்பிக்கையைக் குறைக்கிறது.. இருப்பினும், டாலருக்கு வேறு மாற்று இல்லை என்பதால் தப்பித்து வருகிறது. இருப்பினும், ஒரு நாள் அதன் மீதும் அழுத்தம் அதிகரிக்கவே போகிறது.
தங்கம் விலை உயரும்
இதுபோன்ற காரணங்களால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இப்போது தங்கத்திற்கு முக்கியமான சப்போர்ட்டே டிரம்ப் தான். அவர் இருக்கும் வரை பயமில்லை.. அவர் ஓடி ஓடி தங்கம் விலை உயர வேலை செய்கிறார் என்றே சொல்லலாம். இந்தச் சூழலில் அமெரிக்க பெடரல் வங்கிக்கு அழுத்தம் கொடுத்து அதன் வட்டி விகிதத்தைக் குறைக்க வைத்தால் தங்கம் விலை மேலும் உயரும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
டிரம்பின் மசோதா நிறைவேறினாலும் டாலர் மீதான அழுத்தம் அதிகரிக்கும்.. இதனால் தங்கம் விலை உயரவே செய்யும். அமெரிக்காவில் நடப்பதையெல்லாம் வைத்துப் பார்த்தால் தங்கம் விலை உயரவே செய்யும் என்பதையே காட்டுகிறது. மறுபுறம் ஜப்பானில் பணவீக்கம் வந்துவிட்டது.. வளர்ச்சி வந்துவிட்டது என்கிறார் ஜப்பான் மத்திய வங்கி அதிகாரிகள். அதாவது ஜப்பான் கரன்சி யென் வலுவடைகிறது.
கவனித்தால் புரியும்
அமெரிக்காவில் நடந்ததும் ஜப்பானில் நடப்பதும் தங்கத்திற்கு ஏற்ற ஒரு செய்தி. இதனால் தங்கம் விலை மீண்டும் குறையுமா எனக் கேட்டால் குறையாது என்பதே பதில். இஸ்ரேல் போர், ரஷ்யா உக்ரைன் மோதலும் கூட முடிவதாகத் தெரியவில்லை. இதனால் இப்போது இருக்கும் நிலை தொடரும் என்றே தெரிகிறது" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications