வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் அபராதமா? : மத்திய அரசுக்கு நோட்டீஸ்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, இரண்டு வாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்குச
சென்னை: ஜூலை 31 ஆம் தேதி வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, இரண்டு வாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமானவரி சட்டம் 44 ஏ.பி.ன் கீழ் தங்கள் கணக்குகளுக்கு தணிக்கை தேவைப்படாத பிரிவினர் 2018-2019 மதிப்பீட்டு ஆண்டுக்கான (2017-2018 நிதியாண்டு) வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். குறிப்பிட்ட தேதிக்குள் ஐடி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை வருமானவரித்துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அறிவித்துள்ளது.
மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டுச் சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் ஆகியோர் இந்த வகையின் கீழ் வருகின்றனர். வருமானவரி சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 234 எப் பிரிவின் படி கால தாமதக்கட்டணம் செலுத்த வேண்டியவர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதில் 2 வழிகள் உள்ளன. இ பைலிங் எனப்படும் ஆன்லைன் முறை. வரிப்படிவத்தை நிரப்பி தாக்கல் செய்யும் முறை. ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கு மேல் இருப்பவர்கள் இ-ஃபைலிங் முறையில்தான் தாக்கல் செய்ய வேண்டும்.
ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்ப படிவம் மூலம் தாக்கல் செய்யலாம் அல்லது ஆன்லைன் மூலமாகவும் தாக்கல் செய்யலாம். படிவம் மூலம் தாக்கல் செய்பவர்கள் கண்டிப்பாக வருமான வரித்துறை அலுவலகத்துக்குச் சென்று தாக்கல் செய்ய வேண்டும். கணக்கை தாக்கல் செய்த பின் அதற்கான அத்தாட்சியைப் பெற வேண்டும்.
ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை 31.07.2018க்கு பிறகு ஆனால் 31.12.2018க்கு முன்னதாக தாக்கல் செய்தால் அபராதம் ரூ.5,000. மொத்த வருமானம் ரூ.5 லட்சத்திற்கு அதிகமாக இருப்போர் தங்கள் வருமானவரி கணக்கை 31.12.2018க்கு பிறகு ஆனால் 31.03.2019-க்கு முன்னதாக தாக்கல் செய்தால் அபராதம் ரூ.10,000. வருமானவரி சட்டத்தின் புதிய நடைமுறையின்படி 139-வது பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு ஆண்டின் இறுதிக்கு பிறகு எவ்வித வருமானவரி கணக்கும் தாக்கல் செய்ய இயலாது.
இந்த சட்டத்திருத்தத்தையும், வருமான வரித் துறை உத்தரவையும் எதிர்த்து நிறைமதி அழகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 5 லட்சத்து ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டுபவருக்கும், ஒரு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுபவருக்கும் ஒரே அளவில் அபராதம் விதிப்பது பாரபட்சம் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.