தங்கம்.. அடுத்த செக் வைத்த மோடி.. சிக்கிய நகை கடைகள்.. சாட்டையை சுழற்றும் மத்திய அரசு!
இந்தியாவில் அதிகரித்து வரும் தங்க இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு முக்கியமான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக நகை கடைகளும், நகை உற்பத்தியாளர்களும் பயன்படுத்தப்படும் "Advance Authorisation" திட்டத்தின் கீழ் தங்க இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அன்னிய செலாவணி கையிருப்பின் மீது அதிகரித்து வரும் அழுத்தம், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை ஆகியவற்றின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

100 கிலோ வரம்பு..
வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) வெளியிட்ட புதிய அறிவிப்பின் படி, இனிமேல் Advance Authorisation திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 100 கிலோ தங்கம் மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும். இந்த திட்டம் மூலம் ஏற்றுமதி பொருட்கள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை சுங்கவரி இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்தது. குறிப்பாக நகை ஏற்றுமதி நிறுவனங்கள் இந்த திட்டத்தை அதிகமாக பயன்படுத்தி வந்தன.
ஆனால் தற்போது தங்க இறக்குமதி அளவு கட்டுக்கடங்காமல் உயர்ந்ததால், மத்திய அரசு கண்காணிப்பை கடுமையாக்கியுள்ளது.
முதல் முறை விண்ணப்பம் செய்வோர்
புதிய விதிமுறைகளின் படி, முதல் முறையாக Advance Authorisation மூலம் தங்கம் இறக்குமதி செய்ய விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு கட்டாய உற்பத்தி தளங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
அதாவது, அந்த நிறுவனத்தின் உற்பத்தி மையம் உண்மையில் செயல்படுகிறதா, அதன் உற்பத்தி திறன் என்ன, தொழிற்சாலை இயங்கும் நிலையில் உள்ளதா என்பதனை DGFT பிராந்திய அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். இந்த நடவடிக்கை மூலம் போலி நிறுவனங்கள் தங்க இறக்குமதி செய்வதை தடுக்க உதவும் என்று அரசு நம்புகிறது.
ஏற்றுமதி செய்தால் மட்டுமே மீண்டும் அனுமதி
தற்போது கொண்டு வரப்பட்ட முக்கியமான மாற்றமாக, ஒரு நிறுவனம் முன்பு பெற்ற அனுமதியின் கீழ் பெற்றப்பட்ட 100 கிலோ தங்கத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத ஏற்றுமதி செய்தால் மட்டுமே அடுத்த கட்ட தங்க இறக்குமதி அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் உண்மையில் ஏற்றுமதி உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகிறதா என்பதை அரசு கண்காணிக்க முடியும். இது நகைத் துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
மேலும் தங்கம் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் இனிமேல் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தங்களது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விவரங்களை சார்ட்டர்டு அக்கவுண்டண்ட் சான்றுடன் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், பிராந்திய அதிகாரிகள் மாதந்தோறும் ஒருங்கிணைந்த அறிக்கையை DGFT தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் தங்க வர்த்தகத்தின் மீது மத்திய அரசு நேரடி கண்காணிப்பை அதிகரிக்கிறது.
இறக்குமதி வரியும் உயர்வு
இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததற்கு ஒரு நாள் முன்பு தான் மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது.
இதற்கு முன்பாகவே தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு 3 சதவீத IGST வரியும் விதிக்கப்பட்டிருந்தது. இந்த தொடர் நடவடிக்கைகள் இந்தியாவின் தேவையற்ற இறக்குமதியை குறைத்து, வெளிநாட்டு செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications