கேரளா வெள்ள பாதிப்பு: வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய செப்.15 வரை கால அவகாசம்
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கேரளாவில் பெருவெள்ளம் பாதிப்புகளால் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியானது ஆகஸ்ட் 31, 2018 தேதியிலிருந்து செப்டம்பர் 15, 2018 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது கேரள மாநிலத்தின் அனைத்து வருமான வரி செலுத்துவோருக்கும் பொருந்தும்’ என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
நடப்பு ஆண்டு முதல் வருமான வரி தாக்கல் செய்வது தாமதமானால் ரூ.10,000 வரை அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
கடந்த மாதத்தில், வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை ஜூலை 31ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வரித் துறை நீட்டிப்பு செய்திருந்ததை அடுத்து வரி செலுத்துபவர்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டு 400 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் உடமைகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பொருட்கள் பல மாநிலங்களில் இருந்தும் சென்று கொண்டிருக்கிறது. மாநிலத்தைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது என்றாலும், அப்பணிகள் நிறைவடைய சில மாதங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆவணங்களை வெள்ளத்தில் தொலைத்த பலரும் மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாடு முழுவதிலும் உள்ள வரி செலுத்துவோருக்கு வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால், பெரு வெள்ளத்தால் சேதமடைந்துள்ள கேரள மாநிலத்திற்கு மட்டும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் செப்டம்பர் 15ஆம் தேதி வரையில் நீட்டித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கேரளாவில் பெருவெள்ளம் ஏற்படுத்தியுள்ள இடையூறுகளால், வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியானது ஆகஸ்ட் 31, 2018 தேதியிலிருந்து செப்டம்பர் 15, 2018 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது கேரள மாநிலத்தின் அனைத்து வருமான வரி செலுத்துவோருக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.