UAE கொடுத்த ஷாக்.. மீண்டும் எகிறிய கச்சா எண்ணெய் விலை! அப்போ மே 1 ரெடியா இருங்க!
சென்னை: சர்வதேச எண்ணெய் சந்தை மீண்டும் எச்சரிக்கை மணியை அடிக்க தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள புவியியல் பதற்றம் காரணமாக எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. புதன்கிழமை வர்த்தகத்திலும் விலை அதிகரித்தது இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை மீண்டும் தடாலடியாக உயர இரண்டு காரணம்?
1. ஓபெக் மற்றும் ஓபெக்+ அமைப்பில் இருந்து மே1 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் உறுப்பினராக இருக்கப்போவது இல்லை என அறிவித்ததுள்ளது. இது எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
2. அமெரிக்கா ஈரான் மீது தனது பொருளாதார மற்றும் கடற்படை முடக்கத்தை தொடர்ந்து நீட்டிப்தற்கான வேலையை செய்வதாக வந்த செய்திகள் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

டிரம்ப் உத்தரவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாக குழுவினருக்கு ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான நீண்டகால வர்த்தக முடக்கத்தை விதிக்க தயாராகுமாறு உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை கட்டுப்படுத்தி, அந்நாட்டின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் நோக்கம் கொண்டுள்ளது அமெரிக்கா.
சமீபத்தில் அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், நிலைமை இன்னும் முழுமையாக சீரடையவில்லை. இது "போர் இல்லை, அமைதியும் இல்லை" என்ற நிலைக்கு மாறியுள்ளது.
எண்ணெய் விலை உயர்வு
இந்த பதற்றம் எண்ணெய் விலையை நேரடியாக பாதித்துள்ளது. ஜூன் மாதத்திற்கான பிரெண்ட் கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் ஆர்டர் விலை ஒரு பேரலுக்கு 111.78 டாலராக உயர்ந்துள்ளது. இது எட்டாவது நாளாக தொடர்ச்சியாக உயர்வைக் கண்டுள்ளது. ஜூலை ஒப்பந்த விலையும் அதிகரித்துள்ளது.
இதேபோல் அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100.50 டாலரை எட்டியுள்ளது. இந்த தொடர் உயர்வு, எண்ணெய் விநியோகம் நீண்டகாலத்துக்கு பாதிக்கப்படும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.
பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை - எதிர்காலம் என்ன?
ஈரான் அணு ஆயுத திட்டத்தை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது. மறுபுறம் ஈரான், அமெரிக்காவின் முடக்கத்தை நீக்குவது, இழப்பீடு தொகை வழங்குவது மற்றும் ஹார்முஸ் நீரிணை கட்டுப்பாடு ஆகியவற்றை கோருகிறது.
இந்த கோரிக்கைகளை இரு தரப்பும் மறுப்பு தெரிவிக்கும் வேளையில், பேச்சுவார்த்தை கூட செல்லாத நிலையில் முட்டுக்கட்டை போடப்பட்டு உள்ளது. இதனால் நிலைமை இன்னும் சில காலம் மந்தமான நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களுக்கு பாதிப்பு
எண்ணெய் விலை உயர்வு சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, போக்குவரத்து செலவு அதிகரிப்பு மற்றும் பொதுவான விலை உயர்வு (பணவீக்கம்) ஆகியவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மத்திய அரசு தரப்பில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயராது என கூறினாலும், மே 1 அல்லது மே 2 ஆம் தேதி மத்திய அரசின் வழக்கமான மாதாந்திர எரிபொருள் விலை மறுசீரமைப்பு நடவடிக்கையின் காரணமாக விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் கடந்த 2 மாதத்தில் இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஒரு நாளுக்கு 1500 முதல் 2500 கோடி ரூபாய் வரையில் எதிர்கொண்ட நஷ்டம் தான். இந்த நஷ்டத்தை சமாளிக்க விலையை உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மத்திய அரசு.
விலையை உயர்த்தாவிட்டால் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஆயில் பாண்ட்ஸ்-ஐ பிஜேபி அரசு வேறு பெயரில் கொண்டு வர வேண்டும். ஆனால் இந்த ஆயில் பாண்ட்ஸ்-ஐ பிஜேபி கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் விலை உயர்வு அல்லது புதிய திட்டத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications