நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 5% ஆக இருக்கும்: பிரதமர் மன்மோகன்சிங்
டெல்லி: நாட்டின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது- நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 5% இருக்கும் என்று பிரதமர் மன்மோகன்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற 12-வது ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியர் தின விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2004-ம் ஆண்டு முதல் இப்போது வரை சராசரியாக 7.9 சதவீதமாக உள்ளது. அண்மைக் காலமாக சிறிய அளவில் பொருளாதார பின்னடைவைச் சந்தித்து வருகிறோம்.
இந்த நிதியாண்டில் நமது வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். நாட்டின் பொருளாதாரம் எதிர்காலத்தில் எப்படியிருக்கும் என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழுந்துள்ளது.

இன்றைய நிலையை பார்த்து அவநம்பிக்கை அடைய வேண்டாம்; எதிர்காலத்தை நினைத்து பயப்படவும் வேண்டாம். எதிர்காலத்தை நம்பிக்கையுடனும், தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்வோம். நாட்டின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது.
சமீபகாலமாக மத்திய அரசு பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைத்திருந்தால் மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க முடியும். குறிப்பாக நிதி மற்றும் காப்பீட்டுத் துறையில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்திருக்க முடியும்.
எனினும், ஏற்கெனவே நாம் மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்கள், வெளிநாடுகளிலிருந்து அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கொள்கையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. இந்த கொள்கையை செயல்படுத்துவதன் மூலம்தான் நீடித்த பொருளாதார வளர்ச்சியையும், சமூகத்தில் சமநிலையையும் ஏற்படுத்த முடியும்.
இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications