பருப்பு விலை ஏறிப்போச்சு… அப்போ இனி இட்லி, வடை விலை கூடுமா பாஸ்?
சென்னை: ஆன்லைன் வர்த்தகம், பதுக்கல் காரணமாக தமிழகத்தில் பருப்பு வகைகள் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தோடு ஒப்பிடும் போது கிலோவுக்கு ரூ.30 கூடியுள்ளதால் நுகர்வோர்கள் கலக்கமடைந்துள்ளனர். உளுந்தம்பருப்பு, துவரம்பருப்பு விலை கூடியுள்ளதால் ஹோட்டல்களில் உணவுப்பண்டங்களில் விலை உயரும்அபாயம் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் வட மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படுகின்றன. மேலும், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு போன்றவை வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
விளைச்சல் குறைவு
தற்போது, வடமாநிலங்களில் பருப்பு வகைகள் விளைச்சல் குறைந்துள்ளதால், விலை அதிகரித்து வந்தது. ஆனால், ஆன்லைன் வர்த்தகத்துக்கு அனுமதி, பதுக்கல் காரணமாக செயற்கையான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால், பருப்பு வகைகள் விலை அதிகரித்துள்ளது.
துவரம் பருப்பு
கடந்த மாதம் 100 கிலோ எடை கொண்ட துவரம் பருப்பு (முதல் ரகம்) மூட்டை ரூ.8,200க்கு விற்பனையானது. தற்போது, ரூ.11,200 ஆக விலை அதிகரித்துள்ளது. அதாவது, ரூ.95க்கு விற்பனையான ஒரு கிலோ துவரம் பருப்பு தற்போது ரூ.125 ஆக உயர்ந்துள்ளது. 2-வது ரகம் துவரம் பருப்பு ரூ.85-ல் இருந்து ரூ.116 ஆக கூடியுள்ளது. தான்சானியா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் துவரம் பருப்பு ரூ.75-ல் இருந்து ரூ.105 ஆக அதிகரித்துள்ளது.
உளுந்தம் பருப்பு
இதேபோல், கடந்த மாதம் 100 கிலோ எடை கொண்ட உளுந்தம் பருப்பு மூட்டை ரூ.8 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது, ரூ.11,300 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, ஒரு கிலோ உளுந்தம் பருப்பு ரூ.85ல் இருந்து ரூ.120 ஆக கூடியுள்ளது. பர்மாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உளுந்தம் பருப்பு ரூ.75ல் இருந்து ரூ.110 ஆக அதிகரித்துள்ளது.
கடலைப் பருப்பு
இதேபோல், 50 கிலோ எடை கொண்ட கடலைப்பருப்பு மூட்டை ரூ.2,600ல் இருந்து ரூ.3,300 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ கடலைப்பருப்பு (முதல் ரகம்) ரூ.55ல் இருந்து ரூ.75 ஆகவும், 2வது ரகம் ரூ.45ல் இருந்து ரூ.65 ஆகவும் விலை கூடியுள்ளது.
வறுகடலை
மைசூர் பருப்பு ஒரு கிலோ ரூ.60-ல் இருந்து ரூ.90 ஆகவும், உடைத்த கடலை (வறுத்த கடலை) ரூ.65-ல் இருந்து ரூ.95 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. ஆன்லைன் வர்த்தகம், பதுக்கல் போன்றவற்றை மத்திய அரசு விரைந்து தடுக்காவிட்டால் பருப்பு வகைகள் விலை மூட்டைக்கு ரூ.2 ஆயிரம் அதிகரிக்க அபாயம் உள்ளது என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நுகர்வோர் கலக்கம்
பருப்பு விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளதால்,இல்லத்தரசிகளும், நுகர்வோர்களும் கலக்கமடைந்துள்ளனர். இந்த விலை உயர்வினால் ஹோட்டல்களில் இட்லி, வடை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் உயர வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.
அப்போ இட்லி சாம்பார்?
வீடுகளில் இட்லி, சாம்பாருக்கு இனி கொஞ்சம் இடைவெளி கிடைக்கும் என்று ஆண்கள் ரிலாக்ஸ் ஆனாலும், அதற்கு பதிலாக விலை குறைவு என்று இல்லத்தரசிகள் தினசரி உப்புமா கிண்ட வாய்ப்புள்ளது என்றும் அச்சமடைந்துள்ளனர்.