பூசணி விலை திடீர் சரிவு ... விவசாயிகள் தவிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காய்கறிகளின் விலையி்ல் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர், கழுகுமலை, கடலையூர், நகலாபுரம், புதூர், இலம்புவனம் உள்ளிட்ட கிராமப்புறங்களில் காய்கறிகள் பயிர் செய்யப்பட்டு வருகின்றன.
இதில் பூசணி பயிர் செய்ய செலவு குறைவாக இருப்பதால் பல்வேறு பயிர்களுக்கு இடையே இதையும் விவசாயிகள் ஊடு பயிராக விதைத்துள்ளனர். ஆனால் இந்தாண்டு போதிய மழை பெய்யவில்லை. இதனால் கிணறு மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வந்தனர்.
இதன் காரணமாக செடிகளில் பூசணிகள் அதிகமாக விளைந்துள்ளதால் கோவில்பட்டி மார்க்கெட்டுக்கு அதிக அளவில் பூசணிக்காய் வர தொடங்கியுள்ளது.
கடந்த வாரம் வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து ரூ.10க்கு கொள்முதல் செய்து ரூ.12க்கு விற்பனை செய்தனர். இந்நிலையில் அவற்றின் விலை திடீரென சரிந்ததால் ரூ.5க்கு வாங்கி ரூ.7க்கு விற்க தொங்கியுள்ளனர் வியாபாரிகள்.
இதனால் விவசாயிகள் வேதனை அடைய தொடங்கியுள்ளனர். விவசாயிகள் பலர் இதன் விதைகளை வெளிமாநிலங்களில் இருந்து கிலோ ரூ.1500க்கு வாங்கி வந்து விதைத்துள்ளனர்.
கொடிக்கு சராசரியாக 6 காய்கள் காய்,த்தபோதும் எதிர்பார்த்த விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றமும், கலக்கமும் அடைய தொடங்கியுள்ளனர். நஷ்டத்தை ஈடு செய்ய அரசுதான் உதவ வேண்டும் என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.