ஜூன் துவங்கியதும் அதிர்ச்சி.. இக்கட்டான கட்டத்தில் ஆர்பிஐ.. மக்களே உஷார்!
ரிசர்வ் வங்கி ஜூன் முதல் வாரத்தில் நடத்தவிருக்கும் நாணய கொள்கை கூட்டம், மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள உள்ளது. கடந்த சில நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 4 முறை உயர்ந்திருக்கும் வேளையில், நாட்டின் பணவீக்கத்தை மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
இதன் மூலம் சென்னையில் பெட்ரோல் விலை தற்போது ரூ.107.77 ஆக உயர்ந்துள்ளது. டீசல் விலையும் ரூ.99.55 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் நான்கு முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது வெறும் எரிபொருள் விலை உயர்வு மட்டுமல்ல, இது நாடு முழுவதும் உள்ள பொருட்களின் விலையை பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

டீசல் விலை உயர்வு ஏன் முக்கியம்?
இந்தியாவின் சரக்கு போக்குவரத்தில் 65 முதல் 70 சதவீதம் சாலை வழியாகத்தான் நடைபெறுகிறது. டீசல் விலை உயர்ந்தால் லாரி, பேருந்து உரிமையாளர்கள் சரக்கு கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் காய்கறி, பால், உணவுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தானாகவே உயரும். பெட்ரோல் நேரடியாக குடும்பச் செலவை பாதித்தாலும், டீசல் மூலம் வரும் மறைமுக பாதிப்பு மிகப் பெரியது.
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலருக்கு மேல் தொடர்ந்து நிலைத்திருப்பதும் ஆர்பிஐக்கு கூடுதல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இந்தியா தனது எரிசக்தித் தேவையில் சுமார் 85 சதவீதத்துக்கு மேல் இறக்குமதியை நம்பியுள்ளதால் கச்சா எண்ணெய் விலை, ரூபாய் மதிப்பு இரண்டும் சேர்த்து இந்தியாவின் நிதிநிலையை ஆட்டம் காட்டி வருகிறது.
எனவே உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியப் பொருளாதாரம் நேரடியாக பாதிக்கப்படும். இது இறக்குமதிச் செலவை அதிகரிக்கும், நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரிக்கும், மேலும் ரூபாயின் மதிப்பை பலவீனப்படுத்தும்.
இக்கட்டான நிலையில் ஆர்பிஐ
இந்த நிலையில் ஜூன் மாத முதல் வாரத்தில் நடைபெறும் ஆர்பிஐ நாணய கொள்கை குழுவின் கூட்டம் (MPC) மிகவும் சிக்கலானதாக இருக்கும். பணவீக்கம் கட்டுக்குள் இருந்தால் வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்போது எரிபொருள் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் மீண்டும் உயரும் அபாயம் உள்ளது. எனவே வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவை ஆர்பிஐ தள்ளிப் போட வாய்ப்பு அதிகம்.
இல்லையெனில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதம் உயர்த்தலாம். இந்த உயர்வு அரசு பத்திரங்களுக்கும் பொறுந்தும் என்பதால் அன்னிய முதலீடுகளை ஈர்க்க இது முக்கிய வழியாக மாறக்கூடும். இதேவேளையில் வட்டியை உயர்த்தினால் கடன் வாங்கிய இந்திய கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு இது பெரும் சுமையாக மாறும்.
இதனால் ஆர்பிஐ எத்தகைய முடிவை எடுக்கும் என்பதில் பெரும் சிக்கல் உள்ளது, இதேவேளையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் நிலைப்பாடும் முக்கியம்.
சாமானிய மக்களுக்கு இதன் பொருள் என்ன?
வட்டி உயர்த்தப்பட்டால் வீடு, கார், இரு சக்கர வாகனம் போன்றவற்றுக்கு வாங்கிய கடன்களின் ஈஎம்ஐ அடுத்த சில காலம் உயர்ந்த நிலையிலேயே இருக்கும்.
ஒருபக்கம் காய்கறி, பால், பொருட்களின் விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது. மறுபுறம் ஆர்பிஐ வட்டி உயர்வின் மூலம் ஈஎம்ஐ அதிகரிக்க உள்ளது. இது இரண்டு பக்கம் சாமானிய மக்கள் அடிவாங்க இருக்கும் வேளையில், ஆர்பிஐ பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க முன்னுரிமை கொடுக்கும் என்பதால், வட்டி விகிதக் குறைப்பு இப்போதைக்கு தள்ளிப்போகும் அல்லது அடுத்தக்கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கும்.














Click it and Unblock the Notifications