கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை- ரிசர்வ் வங்கி
சென்னை: நடக்கும் நிதி ஆண்டில் பணவீக்கம் குறைந்திருந்தாலும் அதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
மும்பையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன், " ரிசர்வ் வங்கியிலிருந்து பிற வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ எனப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி 8 சதவீதமாகவே நீடிக்கும்.
வங்கிகளுக்கான சி.ஆர்.ஆர் எனப்படும் ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதமாகவே நீடிக்கும்.கடந்த ஆண்டின் நிதி நிலையின் தரவு மற்றும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு பொருளாதார ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் ஒருமித்த முடிவை அடுத்து இந்த முடிவை மத்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தி வைப்பதே ரிசர்வ் வங்கியின் கொள்கை. 2015 ஆண்டில் வளர்ச்சி விகிதம் 5.5 சதவீதம் இருக்கும். நடப்பு கணக்கு பற்றாக்குறை 2 சதவீதமாக குறையும். பணவீக்கம் 6 சதவீதத்திற்குள் இருக்கும்.
தற்போதைய சூழ்நிலையில், 2013-14 கொள்கை விகிதம் மற்றும் வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.
தேர்தல் கட்டுப்பாடு தற்போது அமலில் உள்ள நிலையில், புதிய வங்கிகள் துவங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கலந்து ஆலோசித்த பின்னர் அறிவிப்புகள் வெளியிடப்படும்.
மேலும் வங்கிகள், வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச பணத்தை வங்கி கணக்கில் வைத்திருக்கவில்லை அல்லது வங்கி கணக்கை இயக்காமல் இருந்தாலோ அதற்காக அபராதம் ஏதும் விதிக்க கூடாது" என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறினார்.