மோடியின் இமேஜை மேலும் பதம் பார்க்கும் பணவீக்கம்!
டெல்லி: நிச்சயம் இந்த அளவு சரிவை பிரதமர் நரேந்திர மோடி எதிர்ப்பார்த்திருக்க மாட்டார், அதுவும் ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில்.
ஒரு பக்கம் அரசியல் அரங்கில் இந்த உலகம் சுற்றும் பிரதமருக்கு பலத்த அடி. அதை வெட்ட வெளிச்சமாக்கியது பீகார் தேர்தல்.
மறுபத்தம் பொருளாதாரம் மேலும் நிலையற்றதாகப் போய்க் கொண்டிருக்கும் சூழல். அந்நிய முதலீடு, அந்நிய முதலீடு ஜெபிக்காத குறை. கவுண்டர் கேட்பது போல, 'மலேசியாவிலிருந்து வருது, ஆஸ்திரேலியாவிலிருந்து வருதுன்றீங்களே... அப்ப, இங்கிருந்த பணமெல்லாம் எங்கேடா?' என்று கேட்கும் அளவுக்கு அந்நிய முதலீட்டுக்கு கையேந்தும் சூழல்.
மார்க்கெட் நிலவரமோ கலவரப்படுத்துகிறது.
அன்றாட உபயோகப் பொருட்களின் உற்பத்தி அதலபாதாளத்துக்குப் போய்விட, சந்தையில் போதிய அளிப்பு (சப்ளை) இல்லாததால், நுகர்வோர் சில்லறை விலைக் குறியீடு கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு 5 சதவீதத்தைத் தாண்டிவிட்டது. வரும் ஜனவரிக்குள் இது 6 சதவீதத்தைத் தாண்டும் என்கின்றனர் சந்தை வல்லுநர்கள். '5 சதவீதம் இருக்கும்போதே இந்த விலை விக்குதே... இன்னும் ஒரு சதவீதம் ஏறினால் என்னாகுமோ?' என அச்சம் தெரிவிக்கின்றனர் மார்க்கெட்டை ஓரளவு புரிந்தவர்கள்.
கன்ஸ்யூமர் ட்யூரபிள்ஸ் எனப்படும் அழிவில்லாத வீட்டு உபயோகப் பொருட்களுக்கு மட்டுமே வங்கிகள் கடன் அளிப்பதால், அவற்றின் உற்பத்தி வீழ்ச்சியடையாமல், கிட்டத்தட்ட நிலையாக உள்ளது. ஆனால் அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்தப்படும் காய்கறிகள் உள்ளிட்ட ஓரிரு நாட்கள் மட்டுமே தாக்குப் பிடிக்கக் கூடிய (Perishable Goods) பொருள்களுக்கு எந்த வகை நிதி ஆதரவும் ஆதாரமும் இல்லாத சூழல். எனவே இந்த வகைப் பொருட்களின் உற்பத்தியும் சப்ளையும் சீராக இல்லை. விளைவு, விலைவாசி விர்ரென்று ஏறி, பணவீக்கத்தை ஏற்றிவிட்டுள்ளது.
'இதுக்கும் மோடிக்கும் என்னங்க சம்பந்தம்? இதனால் அவர் இமேஜ் டேமேஜாகும்?' என்றுகூட சிலர் கேட்கக் கூடும். இணையமும் சமூக வலைத் தளங்களும் இப்படி யோசிக்காமல் கேள்வி எழுப்பும் மனத் துணிவை இன்றைய தலைமுறையினர், ஏன் கடந்த தலைமுறையினரிடையே கூட உருவாக்கி வைத்திருக்கிறது.
ரொம்ப சிம்பிள். பதவிக்கு வந்த உடன், ஏதோ அடுத்த ஆண்டே தன்னை அந்தப் பதவியிலிருந்து விரட்டி விடுவார்களோ என்ற பதைப்புடன் உலகம் பூரா சுற்றிக் கொண்டிருந்தால், நாட்டின் பொருளாதாரத்தில் எந்த ஸ்திரத்தன்மையும் வந்துவிடாது. மேடைகளில் உணர்ச்சிவசப்பட்டு முழங்குவதால் விலைவாசி நிலைத்தன்மை பெற்றுவிடாது. தொலை நோக்குடன் பணவீக்கத்தை அதாவது விலைவாசியை நிலைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
நுகர்வோர் பொருள்களில் முன்னதாக உள்ள நீண்ட கால பயன்பாட்டுப் பொருட்களின் விலைகளைப் போல, குறுகிய காலப் பயன்பாட்டில் உள்ள காய்கறிகள், பழங்கள், பால் போன்றவற்றின் உற்பத்தி மற்றும் விலையை நிலைப்படுத்தும் வகையில் நிதிக் கொள்கையில் மாறுதல்கள் செய்திருக்க வேண்டும்.
மோடி பதவி ஏற்ற கையோடு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியிருந்தால் கூட, சில்லறை விலை பணவீக்கத்தில் இந்த மோசமான நிலைமை தோன்றியிருக்காது. குறிப்பாக பண்டிகைக் காலங்களில் நுகர்வோர் சில்லறை விலைப் பணவீக்கம் எகிறும் என்பது சாதாரண குடிமகனுக்கும் தெரிந்ததே. அதைப் புரிந்து பண்டிகைக் காலத்தைச் சமாளிக்க குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே ஒரு பொது ஜனம் திட்டமிடுவதைப் பார்க்கலாம். அந்தத் திட்டமிடல்கூட மோடி அரசிடம் இல்லை என்பதுதான் இன்த 18 மாதங்களில் நாம் பார்த்து வரும் உண்மை!
வங்கி வட்டி வீதத்தைக் குறைக்க வேண்டும் என அரசியல் தலைவர்களும் தொழிலதிபர்களும் வேண்டிக் கொண்டதால், அதையும் செய்துவிட்டது மத்திய ரிசர்வ் வங்கி. ஆனால் மக்கள் கண்ட பலன் பூஜ்யம்தான். இனி மீண்டும் ஒரு முறை வட்டிக் குறைப்பைச் செய்யப் போவதில்லை என்று கடுப்புடன் தெரிவித்துள்ளார் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.
அந்நிய முதலீடுகள் ஒரு அளவு வரைதான் தேசப் பொருளாதாரத்தின் சமநிலையைக் காக்க உதவும். 100 சதவீதம் அந்நிதிய முதலீடு என்பது, நவீன காலனியாதிக்கத்துக்கு மட்டுமே வழிவகுக்கும். உள்நாட்டு உற்பத்தி, குறிப்பாக மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான பொருள்களின் உற்பத்தி, விலையில் நிலைத்தன்மை ஏற்படும் வரை, 'பொன்னுக்கு வீங்கி' மாதிரிதான் இந்தியப் பொருளாதாரம் காட்சி தரும்!